Tuesday, September 4, 2007

திருக்குறள் தெளிவு

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உனின்" - 942.

உரையாசிரியர்கள் கீழ்க் கண்டவாறு பொருள் கூறுகின்றனர் .

ஒருவன் முன் உண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின் அவன் யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் .
- பரிமேலழகர்.

யாக்கைக்கு மருந்தென்பது ஒன்று வேண்டா . குற்றமற முகாலத்து அருந்திய உணவு அற்றமை அறிந்து பாதுகாத்து உண்பானாயின்.
- மணக்குடவர்.

மருந்தொன்றும் வேண்டாவாம் உடம்பிற்கு , முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து நுகர்வது பாதுகாத்து நுகர்வானாயின்.
- பரிப்பெருமாள்.

செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டு கூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயு சஞ்சரிக்க ஒரு கூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியை விட்டு அசனம் பண்ணக் கடவன் .

- பரிதியார்.

தாம் அங்ஙனம் உண்பது இங்ஙனம் அற்றமை குறிக்கொண்டு ஒழுகப் பெறின் ,உறுவதோர் நோயின்மை தமது யாக்கைக்கு; இனி, வேறு மருந்தொன்று நாவினால் சொல்லும் வேண்டாதாய் விடும்.
- காலிங்கர்.

அருந்தியது அற்றது எனத் திருவள்ளுவர் கூறியதிலிருந்து நாம் முன் உண்ட உணவு உடலுக்குப் பயன்பட்ட பின்னர் உடலை விட்டு நீங்கிய தன்மையையே உணர்த்துகிறார் .
- எல். இராமசாமி, திருக்குறளில் மருந்து. குறள் - 2.

ஒருவன் தான் முன்னுண்டது செரித்ததைக் குறிகளால் தெளிவாக அறிந்து அதன்பின் உண்பானாயின் , அவனுடம்பிற்கு மருந்தென ஒன்றுந் தேவையில்லை.
- பாவாணர்.


ஆய்வு :

இக்குறளுக்கு உரையியற்றிய உரையாசிரியர்கள் யாரும் மருந்தை ,அருத்துவத்தை அறிந்து உரையியற்றியதாகத் தெரியவில்லை. காரணம், அருந்தியது என்னும் சொல்லுக்குரிய பொருளை அறியாமல், அருந்தியது என்பதற்கு உண்டது என்று பொருள் கொண்டுள்ளனர். அதனால், திருவள்ளுவர் கூற எண்ணிய பொருள் அறியப்பெறாமல் போயிற்று.

எவ்வாறென்றால் , உண்பது, திட உணவு . அருந்துவது, திரவ உணவு . அருந்தியது என்பது திட உணவைக் குறிக்காது . திரவ உணவையே குறிக்கும்.

திரவ உணவுகளில் அற்றுப் போகும் அளவிற்குச் செரிக்கும் உணவாக இருப்பது எது ?

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை".

உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி , அவற்றை உண்பார்க்குத் தானும் உணவாய் நிற்பதும் மழை. என்றதனால், நீர், அனைத்து உயிரினங்களுக்கும் வேண்டிய உணவுவகைகளை உண்டாக்கும். நீரே உணவாகவும் ஆகும் என்று பெறப்படுகிறது.

குறள் , அருந்தியது என்று குறிப்பிடுவது நீர் உணவையே எனலாம். எவ்வாறென்றால், நீர் மட்டுமே உண்ட பின்பு உடலில் தங்காமல் முழுவதும் அற்றுப் போகும் அளவிற்குச் செரிக்கும் தன்மை கொண்டது .

நீர் உணவு வகைகளாகிய பால் , பழச்சாறு போன்றவை, சத்துப் பொருள்களை உடலில் விட்டுவிட்டு சக்கைப்பொருள்களை வெளியேற்றும் என்பதால், அவற்றை அற்றவை என்று குறிப்பிடார்.

நீரை உணவாக உண்டால் அது எவ்வாறு நோய்களைப் போக்கி ,உடம்புக்கு மருந்து என்பதே வேண்டாதவாறு எப்படிச் செய்யும்?

செய்யும் என்கிறது , தமிழ் மருத்துவமும், எண்வகை ஓகமும்.

நீர் உணவு முறை

அதாவது , காலையில் எழுந்தவுடன் 'காபி' 'டீ' என்பதை மறந்து விடுங்கள். காலைக்கடனை முடித்துவிட்டு, சுத்தமான வடிகட்டிய தண்ணீரை வயிறு கொள்ளும் அளவு குடியுங்கள். கொதித்த நீர் வேண்டாம்.

காலை ஒன்பது மணியளவில் , கழியும் சிறு நீர், சிறப்புத் துர்நாற்றத்துடன் போதும். குடலில் உள்ள அசுத்தங்கள் பிரிவதைக் காண்பீர்கள். பிறகு உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.

அசைவ உணவுகளை ஒதுக்கிவிடுங்கள் . பால் உணவும் கூடாது. பழங்களும் கூடாது.

பத்து மணிக்கு மேல , காலை உணவாக ஒரு சப்பாத்தி. வேண்டிய அளவு காய்கறிகள் வேகவைத்தவை. குறைவான உப்புடன் சாப்பிடுங்கள்.

மறு நாள் காலையில் முன் போலவே , தண்ணீர் குடியுங்கள். ஒன்பது மணியளவில் மீண்டும் தண்ணீர் குடியுங்கள். பின்னர் காய்கறி சப்பாத்தி உணவு உட்கொள்ளுங்கள்.

நாள் ஆக ஆக நீர் உணவை நண்பகல் , மாலை, இரவு வரை நீட்டித்துக் கொண்டே சென்று இறுதியில் நாள் முழுவதும் நீர் உணவையே உட்கொள்ளுங்கள்.

உங்கள் உடல் எடை குறைந்து கொண்டே வரும் . சில மாதங்களில் உங்களுக்கு உரிய எடை அளவு வந்ததும் எடை குறைவது நின்றுவிடும். அப்போது, உங்கள் உடல் தூய்மையாகிவிட்டது என்று பொருள் .

அதன் பின்னர் சிறுநீர் குறைவாகவே வெளியேறும் . தண்ணீர் குடிப்பதும் குறைவாகவே இருக்கும்.

உடம்பிலிருந்த நோய்கள் நீங்கிவிடும் . உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நீர் உணவை உண்பவர்கள் எந்த பணியைச் செய்பவர்களாகவும் இருக்கலாம் . அவரவர் உழைப்புக்கு ஏற்ப உணவுகளை உண்ணலாம். பணி முடிந்ததும் நீர் உணவு முறைக்கு மாறிவிடலாம்.

இவ்வாறு நிர் உணவு முறைக்கு மாறினால் , அவர்களின் குடல் சுத்தமாக இருக்கும். நோய் அண்டாது. நீண்ட நாள் வாழலாம் என்பதையே, திருக்குறள் குறிப்பிடுகிறது.

இருக்கும் வரை தமிழ் அணையில்

அன்புடன்
இரவா

No comments: