Friday, October 30, 2009

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்

முனைவர் க. நெடுஞ்செழியன் வழங்கிய
அணிந்துரை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.
கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர். ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை. இச்சூழலில்தான் உலகாய்தம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் ஆசீவகம் பற்றியும் எழுத வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக ஏ.எல். பாசம் அவர்களின் ஆய்வு நூலை மேலும் நுணுகிப் படிக்க வேண்டியிருந்தது.

ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி கோசாலர், கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலியைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் அதனால் அவ்விருவரைப் பற்றியும் ஆராய முடியவில்லை எனவும் ஏ.எல். பாசம் வருத்தப்பட்டிருந்தார்.

தமிழில் ‘கழிவெண் பிறப்பு’ என்பதை நல்வெள்ளை என்பர். அந்த நிலையை அடைந்தவர்களை நல்வெள்ளையார் என்பர். அதைப் பாலி மொழியில் ‘பரம சுக்க’ என்பர். பாலி முதலான வட மொழிகளில் அவர்களைப் பற்றி யாதொரு செய்தியும் காணப்படவில்லை என்றாலும், ஆசீவகத்தின் வேர்கள் தமிழ் நாட்டில் நிலை கொண்டிருப்பதாக ஏ.எல். பாசம் கூறியிருப்பதால், கிசசாங்கிசா, நந்தவாச்சா ஆகிய இருவரைப் பற்றிய செய்திகளைத் தமிழ் மூலங்களில் தேடினேன். அப்படித் தேட முற்பட்ட போது வியப்பூட்டும் முடிவுகள் கிடைத்தன. இந்தத் தேடலில் முதலில் அடையாளம் காணப்பட்டவர் நந்தவாச்சாவே ஆவார்.

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மாங்குளம் கற்படுக்கைகள் கணி நந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு அமைக்கப்பட்டனவாகும். அக்கற்படுக்கைகளை அமைத்தவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் உறவினரும் ஆவர். அக் கல்வெட்டில் உள்ள நந்தாசிரியன் எனும் பெயரே நந்தவாச்சா எனப் பாலி மொழியில் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியன் எனும் சொல் ஆசான் எனவும் வழங்கும். தமிழ் ஆசான் - பிறமொழிகளில் ஆச்சாரியார் எனவும் ஆச்சான் எனவும் திரியும். பெரியவாச்சான் எனும் வைணவப் பெரியாரின் பெயரே அதற்குச் சான்றாகும். பெரிய+ஆசான் > பெரியவாச்சான் என்றானதைப் போன்றே நந்த+ஆசான் > நந்தவாசான் > நந்தவாச்சா என்று மருவியுள்ளதும் புலனாயிற்று. ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததால் இவர் கணி நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டால் அறிய முடிந்தது. இக் கணி நந்தாசிரியனே முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் நற்றிணைப் புலவராவார். திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் என்ற ஊரில் உள்ள குன்றில் இவர் ‘முக்தி’ அடைந்ததால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என அழைக்கப்பட்டுள்ளார்.. இன்றைய நிலையில் அங்குள்ள கோயில் முத்தியாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுவதுடன், மலையின் அடிவாரத்தில் ஐயனார் கோயில் இருப்பதும் பழைய வரலாற்றை உறுதி செய்யக் காணலாம்.

நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவியாவார். திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலை கற்படுக்கைக்குரிய வெண்காயபன் என்பவரே அவர் என்பதும், நற்றிணைப் புலவர்களில் ஒருவராகிய மதுரை ஓலைக் கடையத்தனார் நல்வெள்ளையார் என்பவரே அவர் என்பதும் தெளிவாயிற்று. இவ் இருவரையும் பௌத்த இலக்கியங்கள் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுகின்றன. இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் ஆய்வின் வியப்பான முடிவுகளாகும். அத்துடன் பாலி மொழியில் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகக் குறிப்பிடும் மூவரையும் தமிழர்கள் பரம ஐயனாராக - பெரமநாதராக -ப் போற்றி வருவதும் கள ஆய்வில் கண்டுணர்ந்த செய்திகளாகும்.

இப்படி ஆசீவகத்தில் பரம ஐயனார்களாக மூவரும் அஃதாவது மற்கலி, காயபர், கணி நந்தாசிரியன் ஆகிய மூவருமே தமிழகத்தில் வழிபடப்பட்டு வரும் போது ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி மட்டும் எப்படி வடநாட்டவராக இருக்க முடியும்? இந்த வினா என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்தது. வெங்காலூர்ச் சிறையில் பொய் வழக்கு ஒன்றில் தளைப்பட்டிருந்த நேரத்தில் எதிர்பாரா வண்ணம் தோழர் குணா அவர்களும் யானும் மாசாத்தனார் எனும் ஐயனாரே மற்கலி கோசாலர் என்று கண்டுணர்ந்தோம். இப்படியாக ஏறத்தாழ 30 ஆண்டு தொடர் ஆய்வில் ஆசீவகம் பற்றிய பல உண்மைகளைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் சேயாற்றிலிருந்து ஒரு துண்டறிக்கை வந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மற்கலி எனும் பெயர் சேயாறு, வந்தவாசி முதலான பகுதிகளில் பரவலாகப் பிள்ளைகட்குச் சூட்டப்பட்டு வந்ததாகவும், அண்மைக் காலத்தில்தான் அந்த வழக்காறு குறைந்து வருவதாகவும் அத்துண்டறிக்கை உணர்த்தியது. இச் செய்தி ஆசீவகம் பற்றிய ஆய்வில் புதிய வெளிச்சத்தைக் காட்டியது. ஆசீவகத்தின் மூலச்சுவடுகள் சங்க இலங்கியங்களின் அடியூற்றாய்த் திகழ்கின்ற உண்மைகளை எல்லாம் கண்டுணர்ந்த பின்னரும் கூட, ‘ஆசீவகம்’ எனும் பெயர் மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. அது எந்த மொழிச் சொல் என்பதிலும் உறுதி செய்ய முடியாத ஒரு நிலையே தொடர்ந்தது. இச்சூழலில்தான் மற்கலி பற்றிய துண்டறிக்கையை அனுப்பி வைத்த தோழர் ஆதி. சங்கரன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை உருவாக்கியவர்கள் என் அன்புத் தோழர்கள் முகில், ஆற்றல், சரவணன் முதலானோர். அந்தச் சந்திப்பு ஆசீவகம் பற்றிய பல புதிர்களை விடுவித்தது. அந்தச் சந்திப்பின் விளைவே, ‘ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்’ எனும் இச்சிறு நூலுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பாகும்.
ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் பலருக்கும் அந்தப் பெயர் ஒரு பெரும் புதிராகவே இருந்துள்ளது. ஆ+ஜீவன் (உயிர்) என வடமொழிச் சொற்களாகக் கொண்டு அவர்கள் பொருள் விளக்கம் செய்தனர். அம் முயற்சியே அனைத்து வகையான குழப்பங்களுக்கும் காரணமாயிற்று. அந்த நெடுநாளைய குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வை இந்நூல் வழங்கியுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

ஆசீவகம் தமிழ்ச் சொல்லே!

ஆசீவகம் எனும் சொல்லை ஆசு+ஈவு+அகம் என இந்நூலாசிரியர் பிரித்துப் பொருள் விளக்கம் தருகின்றார்.
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற் படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற் கான பெயரேயாம்என்பது ஆசிரியரின் விளக்கமாகும். விளக்கம் புதுமையானது என்றாலும் அது இலக்கண விதிக்கு உட்பட்டிருப்பது அக்கருத்தின் மெய்ம்மையை உறுதி செய்கின்றது.

உயிர்வரி னுக்குறள் மெய்விட் டோடும்எனும் நன்னூல் (164) நூற்பாவின்படிநிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியல் உகரமானது (முற்றியலுகரமும் கூட) வரு மொழி முதலில் உயிர் வந்தால் (தனக்கு இடமாகிய) மெய்யை விட்டு ஓடிவிடும்.என்பது அந்நூற்பாவின் பொருளாகும்.
‘ஆசு’ என்ற சொல்லில் உள்ள ‘சு’ ச்+உ எனப் பிரியும். வருமொழி முதலில் ‘ஈ’ எனும் உயிர் எழுத்து இடம் பெற்றுள்ளதால் இலக்கண விதிப்படி, ஆசு+ஈ = ஆசீ என்றாகும். ஈவு என்ற சொல்லையடுத்து அகம் வருவதால் முந்தைய விதிப்படி ஆசு+ஈவு+அகம் = ஆசீவகம் என வரும். திரு ஆதி . சங்கரன் தரும் இவ் விளக்கம் இலக்கண விதிப்படியும் பொருந்தி விடுவதால் அப் பெயர்க் காரணம் முழுமையாக விளக்கப்பட்டு விடுகிறது. ஆசீவகம் இடவாகுப் பெயராய் அச்சமயத்தைச் சுட்டியுள்ள உண்மை மேலும் மேலும் கூடுதல் விளக்கம் பெற்றுத் தெளிவடைதல் உறுதி.

பேராசிரியர் அரசேந்திரனிடம் இச்சொல்லின் பகுப்பு பற்றி கலந்தாய்வு செய்த போது அவர், ‘வாழ்க்கைக்கு வேண்டிய பற்றுக்கோடான உண்மைகளை வழங்கிய துறவிகள் வாழும் இடம்’ எனப் பொருள் விளக்கம் தந்தார். அத்துடன் ‘ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ’ என்ற புறப்பாடலையும் எடுத்துக் காட்டி விளக்கினார். இவ்விளக்கமும் எண்ணத் தக்கதாய் உள்ளது.

ஆசீவகத்தின் அழியாச் சின்னங்களாக ஆசிரியரால் குறிக்கப்படும்,திருநிலை,சுழற்குறி,கந்தழி,இருபுற முத்தலைக் கோல்ஐம்முக்கோணம்ஆகிய குறியீடுகள் யாவும் பிறமொழிச் சொற்களாகவோ அல்லது மொழி பெயர்ப்புகளாகவோ இல்லாமல் தனித் தமிழ்ச் சொற்களாக உள்ளன. அத்துடன் சுழல்குறி எனும் பெயர் பெரிய புதிருக்கான விடையாகவும் அமைந்துள்ளது பெரும் வியப்பாகும். இச்செய்தியைக் கண்ட அளவிலேயே தோழர் குணா அவர்கள் சுழல்குறியை உணர்த்தும் சுழற்றியமே சுவத்திகம் என வடமொழிகளில் திரிபு பெற்றிருக்க வேண்டும் எனக் கூடுதல் தகவலையும் தந்தார். இது இந்நூலின் வரலாற்றுப் பங்களிப்பு எத்தகையது என்பதை உணர்த்தும் சான்றாகும்.

கோள்நூல்

சோதிடத்திற்கு அவர் கையாளும் ‘கோள்நூல்’ என்ற சொல் வியப்பூட்டக் கூடியதாகும். மற்கலியின் கோட்பாட்டை விளக்கும் நூல் ‘அருங்கலைச் செப்பு’ என்பதாகும். அந்நூலில் ‘கோள்நூல்’ எனும் பெயர்க் காரணம் நல்ல வண்ணம் விளக்கப்பட்டுள்ளது.

நவக்கோள் கூடி நடத்து மாண்புஉவப்பின் நிகழ்ச்சி யது.
ஆய கோள்க ளாட்ட மதுவேகாய நிகழ்ச்சி யெனல்.
நன்றுந் தீது நவக்கோ ளாட்டமென்று உணர்வ தது
தோற்ற ஒடுக்கம் யாவும் கோள்கள்ஆற்ற செயலென் றுணர்.
என அந்நூல் குறிப்பிடக் காணலாம். கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சோதிடம்’ அமைந்துள்ளதால் அதனைக் கோள்நூல் என வழங்குவதுதானே முறையாக இருக்க முடியும்?

இந்நூல் அளவால் மிகவும் சிறியதுதான். எனினும் மிகப் பெரிய பண்பாட்டு வரலாற்றை - ஓரினத்தின் அடையாளத்தை - மீட்டுருவாக்கம் செய்ய வல்ல அடித்தளத்தைக் கொணடுள்ளது என்பதே உண்மை. இந்நூலாசிரியர் பொறியியல் பட்டம் பெற்றவர். ஆயினும் இவரின் மொழிநடை தனித்தமிழில் இயல்பாயும் எளிதில் புரியும் படியும் அமைந்துள்ளது பெருஞ்சிறப்பாகும். இவ்வளவு அரிய செய்திகள் அனைத்தையும் தம் ஆசிரியரிடம் உடனுறைந்து கற்ற பாடங்கள் என்பதை அறியும் போது ஆசீவகம் அழிந்து விட்டது என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை!

தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் இந்நூல் உறுதி செய்கின்றது.
உலகை மாற்றிப் போட்ட ஓர் அறிவியல் கோட்பாடு சார்பியல் விதியாகும். இக் கோட்பாட்டை 14 பக்கங்களில்தான் ஐன்சுடீன் முதன் முதலாக வெளியிட்டிருந்தார். ஒரு கோட்பாட்டின் வெற்றி அதன் அளவில் இல்லை. அது வழங்கும் செய்தியில்தான் உள்ளது. இந்த உண்மை இந்நூலுக்கும் பொருந்தும்.

தமிழ் இன மரபைத் தன் ஆசானிடமிருந்து கற்ற திரு. ஆதி. சங்கரன் இப்போது நமக்கு அவற்றை ஒப்படைக்க முன் வந்துள்ளார். இன்னும் பல உண்மைகளையும் அவர் தருவார். அவரைத் தமிழ் கூறு நல்லுலகின் சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகின்றேன்.


ஆசீவகம் பற்றி....

பன்னெடுங்கால முன்பே வடவர் வருகைக்கு முன்னர் நமக்கெனத் தொன்மையாக ஒரு வாழ்வியல் நெறி இருந்தது. அதனைக் கண்காணிக்கவும் ஒழுகி ஓம்பவும் பல இடங்களில் கற்படுக்கைகளில் இருந்து மக்களுக்கு வழி காட்டியவர்கள்தாம் ஆசீவகத் துறவிகள். இவர்கள் சைனப் படுக்கைகள் உருவாவதற்கு முன்னமே கற்படுக்கைகளமைத்து அங்கிருந்து மக்களுக்கான காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், இன்னோரன்ன பிற செய்திகளிலும் அன்றாட வாழ்வியல், வணிகம் முதலானவற்றிலும் அளவு, நிறை போன்ற வணிக வரைகளையும், வரையறுத்து வாழ்வியலை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அறிவன் கூடங்கள் பலப்பல. அவை கால வெள்ளத்தாற் சிதைந்தும், பிற மதத்தினரால் கவரப்பட்டும், பெயர் மாற்றம் பெற்றும் இன்று மக்களால் மறக்கப்பட்டு விட்டன.

இந்தத் துறவிகளே பல்லுயிர்ப் பாதுகாப்பு, கொல்லாமை, களவாமை, போர்ப்பயிற்சிகள், மெய்யியல் கோட்பாடுகள் போன்றவற்றை மக்களுக்குக் கற்பித்தனர். இந்த ஆசீவகத் துறவிகளுக்கெல்லாம் சிறந்தவராக மற்கலி என்பவர் போற்றப்படுகிறார். மற்கலி என்பதே மக்கள் வழக்கில் ‘மக்கலி’ என்று வழங்கப்பட்டு ‘மக்கிலி’ எனத் திரிந்து வழங்கப் படுகிறது. செய்யாறு பகுதியில் இந்த ‘மக்கிலி’ என்று பெயரிடும் வழக்கம் தற்போது அருகி வருகிறது.
எந்த ஒரு மதமும் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில தந்திரங்களைத் தன்னுள் கற்பித்து வைக்கும். இறந்தவர்கள் பிழைப்பார்கள் என்றும், பறக்கும் குதிரையில் பறந்து சென்றார்கள் என்பது போலவும் பொய்களைக் கூறி அந்த மதங்கள் தங்கள் விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆசீவகமோ மதமாக மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடாமல் மக்களின் அன்றாட வாழ்வியலின் அடிப்படையாக அமைந்து இன்னமும் தனது இலச்சினையைத் தென்னகத்தில் - குறிப்பாகத் தமிழகத்தில் பதித்து வைத்து உள்ளது எண்ணத் தக்கது. எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதச் சின்னங்களை அணிந்திருப்பதை இயல்பாகக் காணலாம். (கிறித்தவர்கள் சிலுவைச் சின்னம் அணிவதைப் போல) ஆசீவகர்கள், மலர்மேல் அமர்ந்த மங்கையின் இருபுறமும் நீரூற்றும் யானைகள் உள்ள இலச்சினையைக் கழுத்தில் அணிவது வழக்கம். (இந்த வழக்கம்தான் இன்று தமிழர்களின் தாலிக் கொடியில் கோர்க்கப்படும், மகாலட்சுமி பொட்டு என்னும் தங்க நாணயமும் கால் காசுகளின் பின்புறத்திலுள்ள நீரூற்றும் இரு யானைகளுக்கிடையில் மலர் மேல் அமர்ந்திருக்கும் பெண் வடிவமும் என்பது குறிப்பிடத் தக்கது.) அவ்வாறு, நமது தாலிக் கொடிகளில் இன்றும் புழங்கி வரும் ஆசீவக மரபு தனது ஆசீவகக் கற்படுக்கைகளையும், ஆசீவகத் துறவிகளையும் இழந்து நிற்கிறது.கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் தனது சிறப்புக் கூறுகளை இரவல் கொடுத்த ஆசீவக சமூகம் இன்று தனது சங்கிலித் தொடரின் அடுத்த வளையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆசீவகத் துறவிகளின் எச்சமாக இருக்கும் சித்தர் பீடங்கள், குருகுலங்கள் மீண்டும் தமது பணியைப் பொது நலம் கருதித் தொடர வேண்டும் எனவும், பொது மக்களையும் அரசமைப்புகளையும் குறை சொல்லிக் கொண்டு, அயனாட்டுப் பண்பாட்டு மோகம் கொண்டு அலையும் இளைஞர் சமுதாயம் தனது பொறுப்புணர்ந்து சுற்றுச் சூழல், பல்லுயிர் ஓம்பல், ஒழுகலாறு, நெறியாண்மை போன்றவற்றில் தனது கவனத்தைத் திருப்பித் தொன்றமிழ் நாட்டின் அருகி வரும் கலைகளைப் புதுக்கித் தருவதில் பங்களிப்பைத் தர வருக எனவும் அழைக்கிறோம்.

இதனை ஒப்புக் கொள்ளும் யாவரும், தமது இல்லத்தில் ஆசீவகச் சின்னங்களை வனையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆதி. சங்கரன்

அஃஉ

முன்னுரை

ஆசீவகம் என்ற சொல்லைக் கேட்கும் போதே அது ஒரு தமிழ்ச் சொல்லா? அன்றிப் பிறமொழிச் சொல்லா? என்பதிலேயே ஆய்வாளர்களுக்குப் பெருந் திணறல் ஏற்படும் அளவுக்கு ஆசீவக நெறி இன்றைக்கு அடைந்துள்ள நிலைமை தோள்மீது கிடக்கும் துண்டினை ஆள் வைத்துத் தேடுவது போல் உள்ளது. ஆசீவகம் வாழ்வியல் நெறியேயன்றிப் பிறவன்று.

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.
ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளையாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.
போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. இவை பற்றிப் பின்னூற்களில் பேசுவோம். தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

இவ்வாறு பல்வேறு பிரிவினராக ஆசீவகத்தினர் பெயர் பெற்றுத் தமக்குள் பிணக்குற்றுக் காலந்தோறும் மாற்றம் பெற்ற ஒழுகியல் கூறுபாடுகளைப் பின்பற்றத் துவங்கினர். காலம் என்பது சமயம் (வேளை) எனும் திசைச் சொல்லாலும் குறிக்கப்பட்டது. (ஒரு வேளை என்பது ஒரு சமயம் என்பது போல்) காலத்தால் ஏற்பட்ட ஒழுகியல் மாற்றம் சமயம் எனும் பாகுபாட்டுப் பிணக்கினைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டு பொதுவியலில் பல்வேறு எதிர்மறைக் கருத்துக்களையும் குழுக்கள் பிரிதலையும் ஏற்படுத்தியது. இதன் பின்னரே சமயங்கள் எனும் தோல் முட்டைகள் மதங்கள் எனும் வலிய ஓடுகளைத் தம்மீது போர்த்திக் கொண்டன. பல்வேறு காலங்களிலும் பிணக்குகள் பரிணாமம் பெற்றன.

பருத்துயர்ந்த ஒரு மரம் பிளக்கப்பட்டுப் பல்வேறு பொருட்களாக மாறுவது போல் (நாற்காலி, கட்டில் போன்று) ஆசீவக மரபு தனது பொதுமையையும், தன்னையுமிழந்து பல்வேறு குழுக்களாகச் சிதறியது. மரம் என்ற பொதுமை, நாற்காலி, கட்டில் என வேற்றுமைப் பட்டது போல் குழுக்கள் சமயங்களாக உருமாறின. அப்பருத்த மரத்தினை வெட்ட உதவிய கோடரிக்கு அம்மரத்தின் கிளையே காம்பாகவும், கொடுவாளுக்குப் பிடியாகவும் இருந்து உதவியது போல் ஆசீவக மரபிலிருந்து பிரிந்த குழுக்களே ஆசீவகத்தின் முகவரியை இல்லாமற் செய்து தாமே பன்னெடுங்காலமாய் இருந்த தனிப்பெரும் பொதுமை போன்றதோர் மாயையை ஏற்படுத்தின. இவ்வாறு தன்னை யிழந்து தமது தொடரிகளாகப் பல்வேறு குழுக்களுக்கு வளர்சிதை மாற்றத்துக்கு உதவிய ஆசீவக மரபின் அழிக்க முடியாத பண்பாட்டுச் சின்னங்கள் இன்னமும் அழிக்க இயலாச் சிறப்பு நிலையில் குமுகத்தில் விரவிக் கிடப்பதனைச் சுட்டிக் காட்டி எமது மனக் கிடக்கையில் உள்ள பேரவாவினைச் சமன் படுத்து முகத்தான் இச்சிறு நூலினை யாம் யாத்தளிக்கிறோம்.

ஆதரவாளர்களுக்கு நன்றி. கருத்தில் மாறுபாடு கொண்டோருக்கு விடையிறுக்கும் பொறுப்பும் எமக்கிருப்பதால் பிணக்குகளைத் தெரிவிக்கலாம் எனத் தங்கள் மறுப்புக்களை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

நன்றியுடன்
ஆசீவகத்துறவினன்
ஆதி. சங்கரன்

1. திருநிலை

ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.

இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும். இதனை இன்றைய மரவினைஞர்கள் கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர். இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசீவக மரபிற்குச் சான்று பகரும் ஆவணமாக உள்ளது. தென்னகத்தின் மக்கள் வாழ்வில் மனையாட்சியின் மாண்பாகக் கருதப்படும் சின்னம் தாலிக்கொடியாகும். இந்த மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் கால்காசுகளின் ஒருபுறத்தில் இன்றும் இந்தச் சின்னம் பொறிக்கப்படுவதால் இந்தக் கால்காசு அணியும் நாமனைவரும் ஆசீவக மரபினைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது வெள்ளிடைமலை.

மேலும் கடவுளர் திருவுருவங்கள் திருவிழாக்களின்போது தேர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுத் தெருத்தெருவாக உலாக் கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும் சிலைகளின் பின்புறம் மரத்தாலான ஒரு வளைவு சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் ‘பிரபை’ என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பர். அவ்வளைவின் இரு புறமும் இரு யானைகள் துதிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கும். அந்தப் பின்புலத்தோடு கூடிய கடவுளர் வடிவம் ஆசீவகத்தோடு நமக்குரிய மரபியல் தொடர்பினைத் தெளிவுறுத்துகிறது.

கோயில்களின் பெண்கடவுளர் தனிக் கோயில் முகப்பிலும், திருமண மண்டப முகப்புகளிலும் இந்தத் திருநிலை அமைக்கப்பட்டிருக்கும் பாங்கும் இந்தத் திருநிலை எனும் ஆசீவகச் சின்னம் இல்லற வாழ்வில் இருப்போர் பயன்படுத்தும் ஒரு மங்கலச் சின்னமாக வழங்கி வந்தது, ஐயந் திரிபற நமக்குப் புலனாகின்றது. இல்லற முகப்புகளைக் கண்ணுறும் எவரும் இச்சின்னம் வனையப்பட்ட இல்லம் ஆசீவக இல்லற நெறியில் ஒழுகிவரும் இல்லம் என்பதனை உணர்த்துவதாக அமைந்தது என்பது தெளிவு.

மாதங்கமொடு பற்செல்வம் மனைதொறு னிறைந்திருக்கமாதங்கம் மலரின்மேவி மகிழ்வொடும் கனிந்துநோக்கமாதங்கம் புறத்திருந்து மாதவள்மிசை நீர்பெய்கும்மாதங்கம் கொடுசெய்நாண்சேர் மங்கலம் நன்றேநன்றே!
(மாதங்கம்(1) மா+தங்கம் = மிகுந்த பொன்(2) மாது+அங்கம் = பெண்ணின் மேனி(3) மாதங்கம் = யானை(4) பொன்னணிகொடு - கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம்)
ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல்.) இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும்.

2. சுழற்குறி


துறவு நிலையில் கொல்லாமை. அழுக்காறின்மை, அவாவின்மை இன்னபிற நற்பண்புகளை மட்டும் பெற்றுத் துறவின் இறுதி நிலையினை அடையு முன்பாக உள்ள தேடல் நிலைத் துறவி களுக்கான ஆசீவகச் சின்னமே சுழற்குறியாகும். இதனை ‘ஸ்வஸ்திக்’ என்னும் பிற மொழிச் சொல்லால் குறிப்பர். இந்த நிலையில் உள்ள துறவிகளுக்கு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற அடைமொழி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த அடை மொழியினை இன்றும் சிலருக்கு நாம் வழங்கி வருவது கண்கூடு. எனவே இந்தச் சுழற்குறி மெய்யியலில் தேடல் நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னமாகவும் இறுதிப் பொருளை அடைந்து விடும் வாய்ப்பு திண்ணம் என்ற உறுதிப் பாட்டு நிலையில் உள்ளவர்களும் பயன்படுத்தி வந்த இந்தச் சின்னம் இப்பொழுதும் நிருவாணத் துறவிகளின் சின்னமாகவும், ஓக நெறியில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதி என்னும் துவக்கக் கடவுளின் இரு நாசிப் புழையும் இணையுமிடத்தின் அடையாளச் சின்னமாகவும் சித்தரிக்கப் படுகிறது ஆசீவக நெறியில் பின்பற்றப்படும் இச்சின்னம் இன்றும் சைனர்களும், காணாபத்தியர்களும் வணங்கும் சின்னமாக உள்ளது. ஆசீவக மரபில் உலகியல் பற்றுகளை ஒதுக்கி பேசா நிலையில் இருந்த துறவியர் சமணர் (சம+அணர் என்றால் இயக்கமற்ற அண்ணத்தினை உடையவர்; அதாவது பேசா நோன்பும் உண்ணா நோன்பும் ஆகிய நிலையில் உள்ளவர் என்று பொருள் படும்.) எனும் பிரிவினர் ஆவர். இந்த பற்றுகளைத் துறந்த தீர்த்தவிடங்கர் (தீர்த்தங்கரர்) வரிசையில் 24ஆவது துறவியான மகாவீரர் சமண நிலையினை சைனம் என்ற சமயமாக வடிவமைத்து ஒரு புதுச் சமயம் உருவாக்கினார். சமண நிலை தவிர்த்த ஏனைய ஆசீவக மரபினருக்கு ஒரு பற்றுக்கோடும் வரையறையும் தேவைப்பட்டது. அவ்வாறு வரையறை செய்யாது போனால் ஆசீவக மரபு அடையாளம் காட்டப்படாமல் போகும் என்ற நிலை உருவானது. அந்த காலக் கட்டத்தில்தான் மற்கலி என்ற ஆசீவகத் துறவி ஆசீவக மரபினை தனித்து அடையாளம் காட்டும் முகத்தான் ஒரு சமய வரைவுக்கு உட்படுத்தினார். இதனை ஆசீவக சமயத்தினை மற்கலிதான் உருவாக்கினார் என்று வரலாறு தவறாக சுட்டுகிறதே ஒழிய உண்மையில் மற்கலியார் ஆசீவகத்தை ஒரு சமயமாக வரைவு படுத்திக் காட்டுவதற்கு முன்னமே ஆசீவகம் ஒரு மரபியலாக இருந்தது என அறிய வேண்டும். ஆசீவகக் கற்படுக்கைகளைக் கைப்பற்றியவர்கள் தமது சின்னமாக எதனையும் அடையாளப் படுத்தா விட்டாலும், இந்தச் சின்னம் அவர்கள் மீதும் தனது இலச்சினையைக் குத்திவிட்டது என்பது உன்னுந்தொறும் வியப்பளிக்கவே செய்கிறது.ஆகச் சைனம், காணாபத்தியம் என்னும் பிற்காலச் சமய மரபுகள் தோன்ற ஆசீவகமே கால்கோளிட்டது.

3. கந்தழி

ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்பட்ட சுருள்வளைவே இந்தக் கந்தழி என்னும் ஆசீவகச் சின்னம். உலகியலைக் கடந்து மெய்ப் பொருளைத் தேடி அலையும் இயக்கநிலையினைக் குறிப்பது இந்தக் கந்தழியாகும். கணக்கியலில் உள்ள எண்ணிலி நிலை (infinity) யினைக் குறிப்பதாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சுருள் வளைவு எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்ட வெளியினுள் நிகழும் பல்வேறு தொடர் இயக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாக உள்ளது.

வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் இதனைக் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப் பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப் படுவதும் உண்டு.

இல்முயல்வோனும், மாணவனும், பொருள் முயல்வோனும் இந்தச் சின்னத்தினைப் பொருத்தி ஒழுகினர் என்பதே இச் சின்னத்தின் சிறப்பினை நமக்குத் தெளிவுறுத்துகிறது.

4. இருபுற முத்தலைக் கோல்

ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் ஒரு முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் படத்தில் உள்ளது போல் வரையப்படும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு துவங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும். அவ்வழக்கமே இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடிக்கப் பட்ட சுவரில் இந்தக் குறியீட்டுச் சின்னத்தினை தமிழக மக்கள் வரை கின்றனர். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவெனில் பேரில்லங்களில் இந்த நிலை அருகி சிறு குடிசைகளிலும் ஊர்ப்புற வீடுகளிலும் மட்டுமே இதனை இன்றைய மக்கள் வரைகின்றனர்.
இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது. இதுவே மாலவன் வழிபாட்டின் அடையாளமாக (நாமமாக)க் கருதப்படுகிறது. உயிர்களைக் காக்கும் மேல்நோக்கிய முனை சிவன் வழிபாட்டில் சிவசின்னமாகவும், பகைஞரைக் கொல்லும் கீழ் நோக்கிய முனை கொற்றவை வழிபாட்டில் கொற்றவையின் கீழ் நோக்கிய முத்தலைக் கோலாகவும் அறியப்படுகின்றது. வெண்கலத்தாலான கைச்சிலம்பிலும் இக்குறியைக் காணலாம். ஆசீவக மரபினரின் இல்லத்திற்கு வருகை தரும் பல்தரத்தோர்க்கும் இது ஒரு எச்சரிக்கைச் சின்னமாகவும், துறவிகளுக்கான ஓம்புதல் நிகழ்த்தப்படும் ஒழுக்கம் கொண்டவர்களின் வாழிடம் எனவும் அறிவிக்கும் அறிவிப்புச் சின்னமாகவும் இது பயன்பட்டது. கோவில் சுவர்களில் பல்லியின் வடிவம் போன்று உள்ள அமைப்பும் இச்சின்னமே.
பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலத்திலும் யாண்டுங் காணப்பெறாத சிவன் வழிபாடு ஒரு ஓக நிலைத் தத்துவமே. இதில் ‘வளிமுதலா எண்ணிய மூன்று’ என மாதாநுபங்கியார் சுட்டிய மூலநாடி மூன்றையும் அவை கூடி நின்று மெய்ஞ்ஞானம் பெறும் நிலையினையும் குறிக்கும் ஒரு அடையாள வரைவே சிவ வழிபாடு. இதனை நச்சி ஓம்பியோர் ஆசீவக சின்னங்களைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் வெளிப்பாடே ஆசீவகத்தின், ‘துதிக்கையை உயர்த்திய யானை’யினைச் சிவன் தோலுரித்ததாகக் கதைக்கப்பட்டது. ஆனால் பண்டைத் தமிழகத்தின் முல்லை நில மக்களிடம் வழிபாட்டிலிருந்த மாலோன் வணக்கத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் யானையினைத் திருமால் தமது படைக்கலத்தால் (கந்தழியால்) காத்ததாகக் காப்பியம் கூறினர். இதுவே மரபுகள் மாறி மதம் தோன்றிப் பிணக்குகளை உருவாக்கியதற்குச் சான்று.

ஓக நெறியினை நாடிய பல துறவிகள் தமது கையில் ‘தண்டு’ எனும் கருவியை வைத்திருந்ததாக அறிகிறோம். இதுவும் நடுத்தலையில்லாத முத்தலைக்கோலின் எச்சமே என்பது காண்டற்றகும்.

இருபுற முத்தலைக்கோலின் மேற்புறம் சிவனுக்கும், கீழ்ப்புறம் கொற்றவை வழிபாட்டின் காலமுறை வளர்ச்சி பெற்றிட்ட காளி, சக்தி, என்று வழங்கப்பட்ட பெண் கடவுளர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே சக்தியும் சிவனும் இருபாதி ஒன்றாக இணைந்த வடிவினர் என வழங்கப்படுகிறது. ஓக நெறியில் கதிர், மதி எனும் இரு மூச்சுக்களும் வெவ்வேறாகப் பிரிந்து செயல்பட்டாலும் சுழுமுனை எனும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.
ஆக ‘சாக்தம்’ ‘சைவம்’ எனும் இரு வழிபாடுகளும் ஆசீவகத்தின் சின்னத்தையே அடையாளமாகக் கொண்டு எழுந்தன. வைணவமும் முத்தலைக் கோலையும் கந்தழியையும் கொண்டே எழுந்ததாகப் புலனாகின்றது.

5. ஐம்முக்கோணம்

ஆசீவகம் மாந்தர்கள் மட்டுமின்றிப் பல்லுயிர் வளன் பற்றியும் அக்கறை கொண்டிருந்தது. பண்டைய நாட்களின் செல்வவளம் ஒருவரது விளைநிலம், மனை சார்ந்த சொத்துக்களை விட அவர்களிடமிருந்த பசுக் கூட்டங்களைக் கொண்டே அளவிடப்பட்டது. செல்வத்தை மாடு எனும் சொல்லால் குறிப்பர். செல்வத்தை மதிப்பிடும் அளவுகோலாக வரையறைப் படுத்தப் பயன் பட்டதால் பசுக் கூட்டங்களும் மாடு என்ற சொல்லால் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாடை இருமாடை எனப் பொன்னிறையைக் கூட மாடு எனும் சொல்லின் வேர்ச்சொல்லையுடைய சொல்லால் குறித்தனர்.

அத்தகைய கால்நடைகளுக்குத் திடுமென ஏற்படும் பேரழிவு தரத்தக்க நோய்களுக்கு ஐந்திறமிக்க மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்வதுடன் அவ்வாறு செறிவூட்டப் பட்ட மருத்துவம் செய்யப்பட்ட கொட்டிலில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோய் அச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் சின்னமாக ஐந்து முக்கோணங்கள் ஒரு நேர் வரிசையில் வரையப்படும். ‘தற்போது கூட ஊர்ப்புறங்களில் மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீரருந்தும் தொட்டியிலும், கொட்டில்களிலும் இச்சின்னத்தினை வரைவதனைக் காணலாம். கால்நடை மருத்துவத்தில் ஐம்பூதக் கலப்பும் செறிவும் சரியான படிக் கண்காணிக்கப் படுவதனை இவ்வைந்து முக்கோணங்கள் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கோமாரி (கோமாற்றி) என்ற நோய் வரும்போதெல்லாம் ஊர்ப்புற மக்கள் இந்தச் சின்னத்தினை மாட்டுக்கொட்டிலில் இன்றும் வரைகின்றனர். இதனைக் கோமாறி எழுதுதல் என்று சேயாறு பகுதியில் வழங்குகின்றனர். இச்சின்னம்பற்றி விரிக்கிற் பெருகும். ஆதலால் இவ்வளவில் நிற்கிறோம். முக்கோணங்கள் நேர் வரிசையில் மட்டுமின்றி தலைகள் ஒன்றோடொன்று பொருந்தியவாறும் வரையும் வழக்கமும் இருந்தது.

6. முப்புள்ளி

அஃஉ எனும் குறியீடு கொண்டது இச்சின்னம்.
மொழி நூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக் குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவதாலும் (எடு. ‘க்’ எனும் எழுத்து ‘க்கு’ என உகரம் சேர்த்து ஒலிக்கப்படுவது.) அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு, இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னத்தின் குறியீடு சிறப்புடையதாகும்

தமிழ் மொழியில் உள்ள இகரம் இம்முப்புள்ளியை ஒத்த ஒரு ஓகக் குறியீடே. இகரத்தில் ‘இ’ என்று எழுதும் போது மூன்று வட்டப் புள்ளிகள் அமைவதைக் காணலாம். ஆனால் இகர நெடிலாகிய ‘ஈ’ காரத்தில் தலைப்புப் புள்ளி தவிர்த்து ஏனைய இரு புள்ளிகளும் பயின்று வருகிறது. ஏனைய உயிர் எழுத்துக்கள் யாவும் ஒரு வட்டத்தினை ஆதியாகக் கொண்டே எழுதப் படுகின்றன. அதாவது உயிர் எழுத்துக்களை எழுதத் துவங்கும் போதே ஒரு முழு வட்டம் போட்ட பிறகே எழுத இயலும். கவனிக்க: அ,இ,ஊ,ஏ,ஐ,ஓ போன்று. முதலில் வட்டம் வரைந்தால்தான் உயிர் எழுத்துக்களை எழுத இயலும். இது அண்ட (முட்டை) இயக்கத்தினைக் குறிக்கிறது. இயக்கம் தருபவை உயிர் எழுத்துக்களே. மெய்யெழுத்துக்களும் எண்ணுப் பெயர்களும் உகர ஒலியில் முடிகின்றன. சுழியம், ஆயிரம், இலக்கம், சங்கம், பதுமம், கோடி இன்னோரன்ன முழு வடிவங்கள் தவிர்த்து ஏனைய எண்ணுருக்கள் உகர ஒலியிலேயே முடிதல் காண்க. (எடு.) ஒன்று, இரண்டு,ஆக, உயிரும் மெய்யும் இரு புறமும் நிற்க, உயிர்ப்பும் ஞானமுமாகிய முப்புள்ளி இடையில் நிற்கும். இக்குறியீட்டின் சிறப்பு விவரித்தலரிது.

ஓக நெறியில் கதிர், மதி, சுடர் எனும் மூன்றையும், வளியில் இடை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நிலைகளையும் இம்முப்புள்ளி குறியா நின்றது.
கௌமார சமயம் என அழைக்கபடும் குறிஞ்சி நிலத்துக் குமர மதத்தில் முருகனது கை வேலாக நிற்கும் படையும் இம்முப்புள்ளியின் பொது வரையறையாகும். குமர மதமும் ஆசீவத்திடம் இதனை இரவல் பெற்றே எழுந்தது.தமிழ் மொழியில் உள்ள ஆய்த எழுத்தினை ஒத்த இச்சின்னம் ஞானம் கூடும் நிலையினை அதாவது இயல்பான இரு கண்களுடன் மூன்றாவதாக அறிவுக் கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இந்த நிலை தனிநிலை (சிறப்பு நிலை) எனப்பட்டது. இந்த முப்புள்ளிக்கு முன்னதாக அகரத்தையும் பின்னதாக உகரத்தையும் சேர்த்து எழுதும் முறை பொது வடிவமாகும்.

ஆசீவக மரபில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் இருப்பிடம் இக்குறியீட்டாலேயே சுட்டப் பட்டது.
எதனையும் எழுதத் துவங்கும் முன் ஓலைகளிலும் தாள்களிலும் இச்சின்னத்தைப் பதிவு செய்த பின்பே எழுதும் முறை உண்டு. சில காலத்திற்கு முன்பு வரை தொடர்ந்த இவ்வழக்கம், அம் முப்புள்ளிக்குப் பின்னால் வரும் உகரத்தை மட்டும் தலைப்பில் எழுதித் துவங்கும் முறையாகக் குறுகி விட்டது. இதனைத் தற்போது பிள்ளையார் சுழி என்று வழங்குகின்றனர்.

பிள்ளையார் சுழியுடன் எழுதத் துவங்கும் யாவரும் ஆசீவக மரபில் வந்தவர்களே என்பது தெளிவாகிறது.

7. புள்நகக் கீற்று

பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப் படுத்தப் பட்டன. நமது சேயாறு பகுதியில் உக்கல் என்ற ஊரின் ‘ஆனைக்கல்’ என வழங்கும் பாறையின் மீது இவ்வடிவம் உள்ளது. இக்கல்லின் பெயரே இவ்விடத்தின் ஆசீவகத் தொன்மையைத் தெளிவுறுத்துகிறது. திருக்கழுக்குன்றத்தின் மலையுச்சியில் கழுகு தன் அலகைத் தேய்த்த இடம் என்று சொல்லபடும் இடம் உண்மையில் புள்நகக் கீற்று அமைந்துள்ள இடம்தான்.

முடிவுரை

ஆசீவகக் கடலினின்றும் சிதறிய ஒரு துளி. மீண்டும் தன் பழைய வடிவம் பெறத் துடிக்கிறது. எமது உணர்வுத் துடிப்பினுக்கிடையில் இழையோடும் தொன்மை அவா தங்களையும் பழைமை உண்மையின் பக்கம் பற்றி இழுக்கும் என நம்பி விடை பெறுகிறேன். நன்றி.

கணியம் எனும் சோதிடம் அறிவியலா? மூடத்தனமா?

சித்தர் பெருமக்களின் இரக்கத்தினால் இயங்கும் புவியுயிர்ச் செயல்பாடுகளில் “கோள்நூல்” எனப்படும் சோதிடம் என்பது பாமரத் தனமான மூட நம்பிக்கையா? அல்லது இயற்கையின் ஆணைக்கொப்ப இயக்கப்படும் ஒரு ஒழுங்கான நிகழ்வமைப்பா என்பதே இங்குக் காணப் போந்த கருத்தாகும்.
முதற்கண், கோள்களின் இயக்கங்களை வரையறைப் படுத்திக் காணுகையில் ஒவ்வொரு கோளுக்கும் இயல்பே அமைந்ததான வடிவம் கோள வடிவமாகும். கோள் எந்த வடிவத்தை உடையதாக உள்ளதோ அவ்வடிவம் “கோளம்” எனப்பட்டது. கோள வடிவம் எனவும் வழங்கத் தலைப்படலாயிற்று. புவியின் வடிவம் கோளம் என்று “கோபர்நிகஸ்” என்ற மேனாட்டு இயற்பியல் அறிஞர் அறிவதற்கு முன்னதாகவே புவி மட்டுமின்றி ஏனைய கோள்களும் உருண்டை வடிவம் கொண்டவையே என மாணிக்க வாசக சுவாமிகள் பாடியுள்ளார்.
“அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்...”(திருவண்டப் பகுதி, திருவாசகம்)
தொன் தமிழ்ச் சான்றோர் கோள்களின் பாதைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றின் விளைவுகளாய “ஒளி மறைவு” (கிரகணம்), பருவ கால மாற்றங்களை முன் உரைத்தமை யாவரும் அறிந்ததே.
இனி சோதிடம் எனப்படும் கோள்நூல் பற்றி ஆயுங்கால், ஒவ்வொரு மனிதனின் பிறப்பியமும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 3600 பாகை கொண்ட நீள் வட்டத்தின் அமைப்பில் குறிப்ப தாகும். (நீள்வட்டம் வரைதல் கைப்பழக்கத்தில் திரிபுற்று நீள் சதுரத்தில் தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும் (பன்னிரண்டு இராசிகளாக) ஒவ்வொன்றும் 300 பாகையை உள்ளடக்கி அமைகிறது. பிறப்பியத்தில் குறிக்கப்படும் இலக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். (அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோளமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.

மேலும் ஆய்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக்கதிர்களுண்டு. அவற்றின் அலை நீளங்களும் ஒளிச் சிதறல் தன்மைகளும் வேறுபட்டவை யாகும். (சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியனவாதல் இதற்கு எடுத்துக் காட்டாகும்.) பிறப்பியத்தில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து கொண்டுள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன. பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புது விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக் கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் “கிரக வலிமை” என்பர்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும். இதனையே “வக்ரம்” எனக் குறிப்பிடுவர். எதிர்ப்புலம் கொண்ட கோள் பகுதிகள் உடைந்து சென்று மறுகோளை நோக்கிச் செல்லும். இப்பகுதிகளின் தாக்குதலால் சிறுசிறு பகுதிகள் அழிவதுண்டு. பெரும்பாலும், வளிமண்டல எல்லைக்குள் படும் துகள்கள் எரிந்து போய்விடுகின்றன. இவையே விண்கல் அல்லது எரிகற்கள் விழுவதாகவும் கூறப்படுவதுண்டு. எப்படியிருப்பினும், கோளியக்க எதிர் விசையால் இயற்கைச் சமநிலை தவறாது “கோள் சமனிலை” பாதுகாக்கப் படுகிறது. இதன் தொடர் நிகழ்வுகள் விரிக்கின் பெருகும் என அஞ்சி விடுக்கிறேன்.

இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்)யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்பட்டுப் பெரிதாக்கப் படுவது போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறப்பிய காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.
இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும். அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே கணியம் என்கின்ற சோதிடமாகும். இவ்வளவு பெரிய அறிவியலை சிந்தனா சக்தியும், கல்வியறிவும் இல்லாத பாமரர் சிலர் கொச்சையாகப் பயன்படுத்திப் பொருளீட்ட முனைந்து விட்டதால் “கோள்நூல் அறிவியல்” மக்களிடையே தனது மதிப்பை இழந்து மூட நம்பிக்கையாகக் கருதப் படுகின்றது.

இக்குறையினைக் களையத் திறன் சார்ந்த சிந்தனையாளர்கள் இத்துறைக்கு வருவதே இதற்குத் தீர்வாக இருக்கும் என்ற எம் விழைவு கூறி முடிக்கிறோம். மேலும், விரிவான விளக்கங்கள் எமது “காஸ்மிக் கதிர்களும் கடுவெளிச் சித்தரும்” எனும் நூலில் காண்க.

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்
வெளியீடு: க
ஆதி. சங்கரன்
திருவள்ளுவராண்டு 2039 கும்பம் திங்கள்
ஆயிரம் படிகள்
அச்சீடு :ஒளவை அச்சகம், மங்கலபுரம், மாத்தூர் அஞ்சல்-631701பேசி: 9443176764
கிடைக்குமிடம் :கோரக்கர் சித்தர் பீடம்மூலை ஆற்றங்கரை, வேளியநல்லூர்,சேயாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.பேசி: 9245712491
பத்து உருவா.

Sunday, April 19, 2009

தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் – அறிவியல் நோக்கு.

சித்த மருத்துவ முறை

தமிழ் மருத்துவம் தொன்மையான இயற்கையானது. அது தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றுடன் இணைத்து வளர்ந்தது. பழங்காலத் தமிழர்கள் பூதவியல் (Five Elements) வானவியல்(Astronomy), வனவியல் (Forest Science), விலங்கியல் (Zoology), தாவரவியல்(Botany), கணியவியல்(Astrology), இயற்கையியல் (natural Science), குமுகாயவியல் (social Science), செயல்முறையியல் (Applied Science), மனித உடலியல் (Human Physiology), உயிர்த் தொழில் நுட்பவியல் (Bio-technology), நோய்க்குண குறியியல் (Pathology) போன்ற பல துறைகளில் அடைந்த தேர்ச்சியினால் தமிழ் மருத்துவத்தை உருவாக்கினார்கள் என்பதற்குச் சங்க நூல்களும் மருத்துவ நூல்களும் சான்றாக விளங்குகின்றன.
திணையும் மருத்துவமும்
நிலத்தின் பண்புகளுக்கேற்ப உலகை நானிலம் எனப் பகுத்து மலையை, காட்டை, வயலை, கடல் சார்ந்த நிலத்தை,
‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ - தொல்.பொருள். 5.
என வழங்கியதுடன், அந்நிலங்களைத் திணையென்றும் அந்நிலங்களில் சிறந்து விளங்கிய மருத்துவப் பூக்களை அந்நிலங்களின் பெயரென வழங்கினர்.
தொல்காப்பியம் உரைக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலமும், குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணையும், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய புறத்திணையும் மரம், கொடி (செடி – தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை) ஆகிய மூலிகைகளின் பெயர்களால் வழங்கப்படுகின்றன. திணைக்குப் பெயர் சூட்டும் காலத்திலிருந்தே தமிழ் மருத்துவ வளர்ச்சி தொடங்குகின்றது.
திணையும் நோயும்
மலை,காடு,வயல்,கடல் ஆகிய நான்கென நிலத்தைக் குறிப்பிட்டதைப் போல, அவற்றின் குணத்தை அவற்றால் கிடைக்கும் நலத்தை மருத்துவம் குறிப்பிடுகிறது.
குறிஞ்சி நிலம் ஐய நோயையும், இரத்தத்தை உறிஞ்சுகின்ற சுரத்தையும், வயிற்றில் ஆமைக் கட்டியையும் உண்டாக்கும்; முல்லை நிலம் பித்த நோயையும், வல்லை நோயையும் வாத நோயையும் உண்டாகும். நெய்தல் நிலம் வாத நோயையும் மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும். ஈரலில் வீக்கத்தையும் குடலில் வாயுவையும் வாத நோயையும் உருவாக்கும். பாலை நிலத்தில் வாத, பித்த, ஐயம் ஆகிய மூன்று வகை நோயையும் வளர்க்கும். மருத நிலம் வாதம், பித்தம், ஐயம் ஆகிய அனைத்தையும் தணிக்கும், குணமாக்கும். (தேரையர் வெண்பா. செய்.286.) எனவே. மருத நிலம் ஒன்றே நோயின்றி வாழத் தகுந்த நிலமாகும் (சித்த மருத்துவாங்கச் சுருக்கம். பக். 101-102) என்று குறிப்பிடப்படுகிறது.
குறிஞ்சி நிலம்
மனித இனம் தோன்றிய முதல் நிலத்தில் பூத்த மலர், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்ந்தது. அதே போல், அம்மண்ணில் தோன்றிய பெண்ணும் பன்னிரண்டாண்டு நிறைந்த பின்பே மலர்ந்தாள். மண்ணில் தோன்றிய செடியும் கொடியும் (பெண்) பன்னிரண்டு ஆண்டுகள் நிறைந்த பின்பே தன்னினப் பெருக்கத்தைத் தொடங்கின என்பதால், இயற்கைக்கும் மனித இனத்திற்கும் இணங்கிய தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்தது என்பதால், நானிலத்தில் குறிஞ்சி அறிவியல் சார்புடையதாக இருப்பதை அறிந்து அந்நிலத்திற்குக் குறிஞ்சி என்று பெயரிட்டனர்.
சித்த மருந்து
மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water) ஆகிய பொருள்கள் உள்ளன.
துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம் எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் கூறக் காண்கிறோம்.
சித்த மருத்துவக் கோட்பாடு
சித்த மருத்துவம் மருந்து, வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு நிலைகளைக் கொண்டது. இந்நான்கு படிநிலைகளும் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவதற்கான முறைகளாகவும் ஒழுக்கச் செயல்களாகவும் கருதுவர். இதன் முதல் நிலையான மருந்து என்றால் அது, உடல் நோயைத் தடுக்கவும், மன நோயை நீக்கவும், நோய் வராமல் காக்கவும், மரணமில்லாப் பெருவாழ்வை அளிக்கவும் உரியதாக வேண்டும். அவ்வாறு அமையக்கூடியதே மருந்து என்கிறது, திருமந்திரம்.
“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” - திருமந்திரம்.
சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்
நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் செயல்முறை விதிகளில் காணப்பட வில்லை. மாறாக, நோயாளியைக் கண்ட மருத்துவன், நோயாளியின் உடல் பருமன்–மெலிவு இவற்றின் தன்மை, நோயின் தன்மை, நோயின் ஆற்றல், நோய் குணமாகுமா? குணமாகாதா என்னும் கணிப்பு, நோயாளி தூங்கிய தூக்கத்தின் அளவு, நோயுற்ற பின் நோயாளிக்கு உண்டாகும் பெண் மயக்கத்தின் அளவு, நான்கு வகையான உடலின் இலக்கணத்தில் நோயாளி உடலின் வகை, ஆள், நாள், குணம், நோய், நாடு, பேதம், நிலை, கோள்களின் ஆட்சி–வீழ்ச்சி ஆகிய அனைத்தும் பார்த்தறிந்து, அதன்பின் மருத்துவம் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின்னர், வேர்களைக் கொண்டு மருந்துகளைக் கொடுக்கவும், அதன்பின்னர் மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்து கொடுக்கவும். இவற்றினாலும் நோயின் குணம் தணியவில்லை என்றால், பற்பம், செந்தூரம் என்னும் மருந்து வகைகளைப் பயன்படுத்தலாம் என்று செயல்முறை விதிகள் கூறப்படுகின்றன. (அகத்தியர் பின் - 80. பா. 38, 39. )
பஞ்சபூதமும் உடம்பும்
உடம்பைப் பஞ்சபூதங்கள் ஆட்சி செய்கின்றன. அவற்றின் அளவு சிறிது மாறினாலும் உயிர்க்குக் கேடு வந்து நேரும் என்கிறது சித்த மருத்துவம். (யூகி கும்மி – 1000. பா.861).
உடல் பஞ்ச பூத மயமானது
மண் - எலும்பு தசை தோல் நரம்பு மயிர்
நீர் - மூளை சிறுநீர் கொழுப்பு வெண்ணீர் குருதி
தீ - புணர்ச்சி சோம்பல் தூக்கம் ஆணவம் பயம்
வளி - கிடத்தல் இருத்தல் நடத்தல் ஓடல் தாண்டல்
விண் - மாச்சரியம் மதம் மோகம் உலோபம் காமம்
என, பூதங்களின் ஆட்சி நடைபெறுகின்றன.
ஆறு சுவையும் ஐம்பூதமும்.
இனிப்பு = மண் + நீர்
புளிப்பு = மண் + தீ
உவர்ப்பு = நீர் + தீ
கைப்பு = காற்று + விண்
கார்ப்பு = தீ + காற்று
துவர்ப்பு = மண் + காற்று
உறுப்புகளில் கோள்கள்
அண்டத்திலுள்ள கோள்களின், ஆற்றலுக்கும், மனித உடலிலுள்ள உறுப்புகளின் ஆற்றலுக்கும் தொடர்பு இருக்கின்றன. அவை,
தமரகம் - ஞாயிற்று ஆற்றல்
மூளை - திங்கள் ஆற்றல்
பித்தப்பை - செவ்வாய் ஆற்றல்
நுரையீரல் - அறிவன் ஆற்றல்
கல்லிரல் - வியாழன் ஆற்றல்
நீர்க்குண்டிக்காய் - வெள்ளி ஆற்றல்
மண்ணீரல் - காரி ஆற்றல்
என்று சித்த மருத்துவம் கணித்துள்ளது.
உறுப்புகளில் விண்மீன்கள்.
விண்மீன்களும் மனித உடலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆதலினால், உடல் உறுப்புகளில் உண்டாகும் நோய்க் குற்றங்களுக்கும் விண்மீன்களுக்கும் தொடர்பு உள்ளன என்பது தெரிகிறது. அவற்றின் விபரம் வருமாறு; -
அசுவணி : புறங்கால்
பரணி : உள்ளங்கால்
கிருத்திகை : தலை
உரோகிணி : நெற்றி
மிருகசிரம் : புருவம்
திருவாதிரை : கண்
புனர்பூசம் : மூக்கு
பூசம் : முகம்
ஆயில்யம் : காது
மகம் : உதடு மேவாய்
பூ ர ம் : வலது கை
உத்திரம் : இடது கை
அஸ்தம் : கை விரல்
சித்திரை : கழுத்து
சுவாதி : மார்பு
விசாகம் : மூளை
அனுசம் : வயிறு
கேட்டை : வலப் பக்கம்
மூலம் : இடப் பக்கம்
பூராடம் : முதுகு
உத்திராடம் : இடை
திருவோணம் : குய்யம்
அவிட்டம் : குதம்
சதையம் : வலது தொடை
பூரட்டாதி : இடது தொடை
உத்திரட்டாதி : முழங்கால்
இரேவதி : கணைக்கால்
மனிதனின் உடலில் இருபத்தேழு விண்மீன்களும் தங்களின் இயக்கத்தைச் செலுத்தி வருகின்றன. மனிதன் பிறக்கும் போது விண்மீன் மண்டலத்தில் சந்திரனின் இடம் எந்த விண்மீனில் இருக்கிறதோ அதுவே அம்மனிதன் பிறந்த விண்மீனாகக் கொள்ளப்படுகிறது. அந்த விண்மீன், அவனின் உடல் உறுப்புகளில் எந்த உறுப்பின் ஆதிக்கத்தில் உள்ளதோ அந்த உறுப்பே அம்மனிதனின் உயிர் உறையும் இடமாக இருக்கும் என்பது விதி.
கோள்களும் நோய்களும்
ஞாயிறு : வலக்கண் நோய், இதய நோய், மூல நோய், வயிற்றுக் கடுப்பு.
சந்திரன் : இடக்கண் நோய், ஐயநோய், மலேரியா, மன நோய், கழிச்சல்.
செவ்வாய் : தீக்காயம், நஞ்சு அபாயம், வெட்டைச் சூடு, இரத்த வாந்தி.
அறிவன் : கழுத்து வலி, வெண்குட்டம், மூளைக் காய்ச்சல், காது வலி,
ஒற்றைத் தலைவலி.
வியாழன் : வாயுக் கோளாறு, உடல் பருமன், மூச்சடைப்பு, புற்று நோய்,
தலை வழுக்கை
வெள்ளி : நீர்த்தாரை,பிறப்புறுப்புக் குறைபாடு, எய்ட்ஸ், தேமல்,
வெள்ளைப் படுதல், வீரியக் குறைவு,
காரி : வயிற்று வலி, சளித் தொல்லை, மூட்டுவலி, யானைக்கால், பக்க
வாதம், வலிப்பு நோய்,நீரிழிவு.
இராகு : புற்று நோய், இரைப்பு, விஷக்கடி.
கேது : அஜீரணம், மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவு, இரைப்பு.

அண்டத்தில் இயங்கும் ஆற்றலுக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு, பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை. என்பதை,
" அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே''
என்று, சட்டமுனிஞானம் உரைக்கிறது.
பூதமும் பிறப்பும்
பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் நிறைந்திருக்கின்றன. எந்த இடத்தில் பூதங்கள் அனைத்தும் இல்லையோ, அந்த இடத்தில் உயிரினங்களும் அவற்றின் பிறப்பும் இல்லை என்ற கருத்து உறுதிப் படுவதற்கும், பூதங்கள் எல்லாம் ஒரே அளவில் இருந்தால், அங்கும் பிறப்பில்லை.அவை, பங்கு பெரும் அளவு மாறினால் உயிர் உண்டாகும் என்பர். (ஒளவைக் குறள் - செய்.2). இது, உயிரிங்கள் தோன்றியதற்கான அடிப்படையை அறிவிக்கிறது.
பூதத்தின் அளவு
நெல்லிக்காய், மிளகு, கடுக்காய், மஞ்சள், வேம்பரிசி என்பவை பஞ்சபூதத்தை அடையாளம் காட்ட சான்றாகக் கூறும் மருந்துப் பொருள்கள். அவை முறையே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றும், அவை 6,5,4,3,2 என்னும் அளவுகளில் உடலிலும் பொருளிலும் கலந்துள்ளன என்று குறிக்கப்படுகிறது. (மருத்துவத் தனிப்பாடல். 1)
பஞ்சபூதங்கள் மண் -5, நீர் -4, தீ -3, காற்று -2, ஆகாயம் –1 என்ற விகிதத்தில் கலந்திருப்பதால் இதன் அடிப்படையிலேயே மருந்துப் பொருள்கள் கூட்டப் படுகின்றன.
பூத மருந்து
உடலுறுப்புகளில் பஞ்சபூதங்களின் ஆட்சி இருப்பதனால் அவற்றில் உண்டாகும் நோய்களுக்கும் பஞ்சபூதங்களின் தொடர்பு இருக்க வேண்டும். அந்நோய்களுக்கு அளிக்கப் படும் மருந்தும் பஞ்சபூதம் கலந்த கலவையாக இருக்கவேண்டும் , என்பதில் மருத்துவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ஆகவே, பஞ்ச பூதம் கலந்த மருந்தையே பயன்படுத்துகின்றார்கள். அவ்வகையில் ஒன்றான ‘பஞ்சலோகச் செந்தூரம்’, என்னும் ஒரே மருந்து வாத (காற்று) நோய் 84, பித்த (தீ) நோய் 48, ஐய (நீர்) நோய் 96 ஆக 228 நோய்களைப் போக்கக்கூடியதாக இருக்கிறது.

பஞ்சபூதத்தின் இயல்பை அறிந்து அதன் இயல்பிற்கேற்ப மருந்து செய்வதனால் இத்தனை நோயையும் ஒரே மருந்து குணம் படுத்துகிறது. இது போன்ற முறையை வேறு எந்த மருத்துவத்திலும் காண இயலாது.
தொல்காப்பியரும் சித்தர்களும்
காலத்தைச் சிறுபொழுதென்றும் பெரும்பொழுதென்றும் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் காலத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், தென்தமிழ்நாடு, பூமியின் நடுக்கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. அதனால், காலக்கணிதம் கூறும் நாள்களுக்கு முன்னதாகவே பொழுதுகள் தொடங்கி விடுகின்றன. காட்டாக, கார்த்திகைப் பதினைந்துக்குப் பின் பனி பெய்வதையும், பங்குனி பதினைந்துக்குப் பின் வெப்பம் அதிகமாவதையும் கூறுவர். இது, மருத்துவர்களின் வானியல் நுட்பத்திற்குச் சான்றாகலாம்.
காலமும் வெப்பமும்
மருந்துகளைச் செய்வதற்கு வெப்பம் அளவாக இருக்க வேண்டும் என்பதால், வேனில் காலத்தில் கிடைக்கும் வெப்பம் கூதிர் காலத்தில் கிடைக்காதாகையால், காலத்தை அறிந்து மருந்து செய்ய வேண்டும் என்பர்.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்,
கருதி இடத்தாற் செயின். (திருக். 484)
அதாவது, பங்குனி முதல் மாசி ஈறாக வரும் மாதங்கள் பன்னிரண்டில் இரண்டு இரண்டு மாதங்களாகப் பெரும் பொழுது காலத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மருந்தை ஒவ்வொரு பொழுதில் செய்திடுமாறு கூறப்படுகிறது.
பங்குனி, சித்திரை – குரு மருந்து; தை, மாசி – செயநீர்;
ஐப்பசி, கார்த்திகை – உருக்கு வகை; ஆடி, ஆவணி – திராவகம்;
வைகாசி ஆனி – சாரணை; புரட்டாசி, மார்கழி – செந்தூரம்;
ஆகியவை செய்திட வேண்டும். இதில் ஏதோனும் தவறுகள் நேர்ந்தால் செய்யும் மருந்து சரியான பாகமாக அமையாது என்ற கண்டிப்பும் காணப்படுகிறது.
அறுவை மருத்துவமும் காலமும்
மருத்துவ உலகின் மகத்தான சாதனை அறுவை மருத்துவம் என்பர். இதன் தொடக்கம் என்று ஏற்பட்டது என்பதை அறிய முடியாது. வேல்பட்ட புண்ணைத் தைக்கும் முறை (பதிற்றுப்பத்து. 5:2:1-4) நம் முன் னோர்கள் வகுத்த முறை என்பது தெரிகிறது. அவ்வாறு புண்களை நோய்ப் பகுதிகளை நீக்க, செய்யப் படுகின்ற அறுவை மருத்துவம் எந்த நாளில் எந்தப் பகுதியில் செய்யக் கூடாது என்பது குறிப்பிடப்படுகின்றது.
அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் உடலில், ‘அமுத நிலைகள்’ சுழன்று கொண்டிருப்பதாகவும், அதன் சுழற்சியின் போது, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியிலும் நின்று செல்லும். அந்தப் பகுதி எது என்பதை அறிந்து,அந்த நாளில் அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாதிருப்பது நலமென்பர். அது மட்டுமல்ல, அந்த நாளில் அந்தப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டாலோ, குத்து வெட்டு போன்றவை ஏற்பட்டாலோ, பாம்பு, அட்டை, சிலந்தி போன்றவை கடித்தாலோ நோய் தீராமல் மரணம் ஏற்படும் என்றும், நாள்களை அறிந்து அறுவை சிகிச்சை செய்தால் நோய் நீங்குமென்றும் கூறப்படுகிறது. (அகத்தியர் நயன விதி. பா. 480)
கற்பம்
“கற்பம்” உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.
‘அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்
தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு
பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே’
- திருமந்திரம். செய்.
கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ணவேண்டும் என்னும் விதி போகர் நூலில் காணப்படுகிறது. (போகர்-700. பா. 267-80)
கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே! என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.
இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்? தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது.
இரத்தச்சுத்தி
உடல் தூய்மைக்கு (காயசித்தி) இரத்தம் தூய்மையாக வேண்டும். இரத்தத்தை கொண்டே உடலின் நோய்க் குற்றங்கள் அறியப்பட்டு வருகின்றன. அதேபோல் இரத்தத்தைத் தூய்மையாக்கி, உடலைத் தூய்மையாக்கும் முறை சித்த மருத்துவத்தின் கோட்பாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இரத்தத்திலுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதே மருத்துவத் துறையின் தலையாயப் பணி என்பதை அடிப்படையாகவும் கொண்டிருக்கக் காண்கிறோம்.
" உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்
உதிரத்தில் உத்தமனே நோயும் போகும்.'' (நந்தீசர் சகல கலி ஞானம்- பா. 926)
ஒரு மண்டலம் உண்டால் நோய் போவதுடன் இரத்தத்திலுள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்ம மருத்துவம்
சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இயங்குவது வர்மமாகும். இதனை மர்ம மருத்துவம் என்றும் கூறுவர். வர்மம், மருத்துவம் மட்டுமல்லாமல், எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கிறது.
வர்ம முறைகளால் எலும்பு முறிவு, ஒடிவு போன்றவற்றுக்கு மருத்துவம் செய்யப்படும். வர்மத்தினால் பல நோய்களைக் குணப்படுத்த முடியும். நோயாளியின் மர்மப் பகுதிகளில் அடித்தும், தட்டியும், தொட்டும், தடவியும், செய்யப்படும். இன்றைய நவீன மருத்துவ முறையில் ஒன்றான ‘நரம்பியல் முறையே’ பழங்காலத்தில் வர்ம முறையாகக் கருதப்பட்டிருந்தது.
வர்மத்தின் தேவை:
" அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்ன செய்வோம்''
(விவேக சிந்தாமணி. பா.20)
என்னும் இப்பாடல், வர்ம மருத்துவத்தின் தேவையைக் குறிப்பால் உணர்த்துகிறது.
இளமைக் காலங்களில் இளைஞர்கள் மன மகிழ்ச்சிக்காக விளையாடும் போது, வர்ம நிலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுகின்ற அடிகள், அவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக் கூடியதாக இருக்கிறது.
பருவத்தைப் பாழாக்கும் வர்மம்
வர்மங்களில் சில மரணத்தைத் தரும். சில கடுமையான நோயையும் துன்பத்தையும் தரும் என கூறப்படுகிறது. ஆண்களை அலியாகவும், பெண்களை மலடியாகவும் ஆக்கக் கூடிய வர்மம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (ஒடிவுமுரிவு சாரி நிகண்டகராதி. பா. 430)
இடுப்பு சாலத்தில் உள்ள நீர்ப்பிசி நரம்பு முறிந்தால், மூன்றாம் நாளில் மரணம் வரும். மதி மயக்கம் உண்டாகும். கண் ஒளி போகும். உடலில் குத்தல் உண்டாகும். சிறுநீரோடு சீழ் கலந்து போகும். இந்தக் குணங்களே ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டாகும் என்றாலும், இளம் பெண் பூப்படைய மாட்டாள். பருவடைந்தவள் மாதவிடாய் அடைய மாட்டாள். கருத்தரிப்பு உண்டாகாது. அதே போல், ஆண்களுக்கு ஆண்மை குன்றிப் போகும் (ஒடிவுமுரிவு சாரி நிகண்டகராதி. பா. 424-432) என்று, நரம்பின் இயல்பை நன்குணர்ந்து உரைக்கப் பட்டுள்ளது.
மனநலம்
மனத்தைச் செம்மை படுத்துவதும் சித்த மருத்துவத்தின் நோக்கமாகும். மனத்தின் வழியே இன்பமும் துன்பமும் என்பதால் மனத்தூய்மைக்கு மருத்துவ முறையிலும் யோக முறையிலும் உத்திகள் பல ஆளப்படுகின்றன.
“மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்” - திருக்குறள். 457.
மனத்தில் நோய் தோன்றுவதற்குக் காரணம் பேய், பூதம், எச்சினி, தேவதை என்றெல்லாம் கூறுவது அறியாமை எனக்கூறி, மன நோய்க்கான காரணத்தையும் அதனைப் போக்குதற்கான மருத்துவ முறைகளையும் உரைக்கிறது, ‘கிறுக்குகள் – 18’ என்னும் நூல். மனநல மருத்துவங்கள் தோன்றியதே சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் என்பர். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனநலத்தை ஆராய்ந்து அதற்கான மருத்துவத்தையும் கூறியுள்ளனர் .
சித்த மருத்துவத்தின் அடிப்படைகள்
சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் நவீன அறிவியலோடு ஒத்த அமைப்பில் உருவானவை. ஆழ்ந்து நோக்கும் போது அறிவியலின் அளவை இயலிலின்று (Logic) எந்த விதத்திலும் மாறுபடாதவை. காண்டல் (Observation), கருதுதல் (Inference), கருதுகோள் (Hypothesis), என்னும் மூன்று பிரமாணங்கள் (Factors) அடிப்படையானவை. ஒப்புறை, எதிருறை, கலப்புரை என்னும் மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. (சித்தமருத்துவம். பக்.9)
சித்த மருந்தியல் தத்துவத்தின்படி, உடலானது ஐம்பூதங்களாலும், பூதங்களின் தொகுதியான மூன்று உயிர்த்தாதுகளாலும் (வாதம், பித்தம், ஐயம்) ஆனது. இம்மூன்று தாதுகளும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவாதிக் குறைகளாலும், கோள்களின் பேதங்களாலும், தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை அடையும். வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்றின் நிலைப்பிறழ்ச்சியால் நோய்கள் தோன்றுகின்றன. வாதம் இயக்கும் (Starter), பித்தம் இயங்கும் (Accelerator), ஐயம் நிறுத்தும் (Break), மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந்நிலைப் பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை நாடிகளின் நடையைக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படுகிறது. மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே. சித்த மருத்துவம் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர். (தமிழ்ச் சுவடிகளில் குழந்தை மருத்துவம். பக்.30 – 31)
“நஞ்சை அமுதாக்கும் வித்தையை நம் சித்தர்களிடம் காண்கிறோம். நவபாடாணங்களில் ஒன்றான நாபி (Acconitum ferox) ஒரு பொல்லாத நஞ்சு. அதனைக் கோமூத்திரத்தில் இடுவதன் முன்னரும், இட்ட பின்னரும் வேதியல் நிலையில் சோதித்துப் பார்த்தனர். 24 மணி நேரம் கோநீரால் சுத்தியடைந்த நாபி இதயத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு முன், இதயத்துடிப்பை, குருதி அழுத்தத்தைக் குறைத்து உயிரைக் கொன்று விடுகிறது. மாஸ்கர் (Masker), காய்ஸ் (Caius) என்பவர்கள், 1937இல் செய்த சோதனையில், நாபியில் அடங்கிய அக்கோனிடின் (Aconitine) கோநீரால் தீமை குறைந்த அக்கோனிடினாக மாறுகிறது என்று கண்டு பிடித்தனர். வேதியல் மாற்றம் கோநீரால் ஏற்படுவதை அறியும் போது, சித்தர்களின் சுத்திமுறை அறிவியல் முறையில் அமைந்த ஒன்று என்பதால், சித்த மருத்துவமும் அறிவியல் மருத்துவம் என்று கூறலாம்.
பாதரசம்
உலக மருத்துவர்களில் சித்தர்களும் சீனர்களுமே பாதரசத்தை மருந்தாகப் பயன்படுகின்றனர். அதிலும் அதிக அளவில் பயன்படுத்தியவர்கள், சித்தர்களே. இன்றைய அறிவியலார் பயன்படுத்திய பாதரசம் சேர்ந்த மருந்து ஆபத்தானவை என்று விலக்கப்பட்டன. ஆனால், சித்த மருந்து இன்றும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கிறது.
இலிங்கத்திலிருந்து இரசத்தைப் பிரித்தெடுத்தல் (Destructive distillation of mercury from cinnabar by sublimation), தங்கம், வெள்ளி, வெள்ளீயம் ஆகியவற்றில் இரசத்தைச் சேர்த்து இரசக் கலவை (amalgam) உண்டாக்கி லோகமாரணம் செய்து மருந்தாக்குதல், சித்த மருத்துவத்தின் மருந்தியல் அறிவியலுக்கு ஓர் எடுத்துக் காட்டு.
சித்த மருத்துவத்தில் பாதரசக் கலப்புள்ள மருந்துகள் சிறுநீர் பெருக்கிகளாகவும் (diuretics), மேகப் பிணி விலக்கியாகவும் (anti-syphilitic), மலமிளக்கியாகவும் (laxative), அழுகலகற்றியாகவும் (anti-septic), சுரம், குன்மம், கழிச்சல் நோய்கள், கீல்வாத நோய், புற்று நோய் ஆகியவற்றுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
மருந்தாக்கம் (வைப்பு முறை)
இயற்கையாகக் கிடைக்கும் பாடாணங்கள் 32. அவற்றைக் கொண்டு, செயற்கையாக 32 பாடாணங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் கடுமையான நச்சுத் தன்மை கொண்டவை. அவற்றை அருந்தினால், சில மணி நேரத்திலேயே மரணத்தை ஏற்படுத்தும். அவை அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்றன. முதிர்ந்த நோய்களையும் மரபு நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை. அவற்றினால் எவ்விதமான புற விளைவுகளும் வந்தாக வரலாறில்லை.
செயற்கை மூலிகைச் செம்பு
“அவுரி, ஓரிலைத் தாமரை, செவ்வல்லி, பிளியறணை, அமுரி, கோவை, பிடர்முக்கி, கொடியொளிச் சிகப்பு, செந்திராய், கரியசாலை, சிறுகீரை ஆகியவற்றுடன், வெண்கரு, குன்றி, சீனம் ஆகிய இவற்றைச் சேர்த்து, காய்ச்சி தாரம், இந்துப்பு, மெழுகு, வெண்ணை சேர்த்து மூடி எரித்தெடுத்து, அதன் சாம்ப லுக்கு எட்டுக்கு ஒன்று ஆவின் நெய், வெண்காரம், வெல்லம், குன்றி இவற்றைச் சேர்த்துப் பிசைந்து, பத்துக்கு ஒன்று குடோரி சேர்த்து மூன்று நாள் அரைத்து வெய்யலில் காய வைத்து சர உலையில் ஊத மூலிகை செம்பாகும்” (போகர் நிகண்டு – பா. 472-476) என்பர்.
இந்தச் செயற்கைச் செம்பினால் செய்யப்படுகின்ற மருந்து வீரிய மிக்கதாகவும் நோயையும், நோயின் மூலத்தையும் அழிக்க வல்லதாகவும் இருக்கு மென்பர். (போகர் கற்பவிதி. பா. 100)
இவ்வாறு, செயற்கை முறையில் மருந்துகளையும் உலோகங்களையும் உருவாக்கி மருந்தாகப் பயன்படுத்தி மக்களுக்கு மருத்துவம் செய்தவர்கள், சித்தர்கள்.
கறுப்பு மூலிகை
மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது. கரியசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமை யானதாகவும் மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
உலோக மாற்றுக் கலை
சித்த மருத்துவம் என்று கூறியவுடன் முதலில் நினைவுக்கு வருவது இரசவாதமாகும். இரசவாதம் என்றால், “உலோக மாற்றுக் கலை’ என்றும், தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக மாற்றுவதாகும். அது, பொருள் ஈட்டுவதற்காகச் செய்யக் கூடியதல்ல. சித்தர்கள் செய்கின்ற மருந்தின் செயல் எவ்வாறிருக்கிறது என்று சோதனை செய்வதாகும். தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றி அந்த உலோகங்களைக் கொண்டு செய்யப்படுகின்ற மருந்து, நோயுடைய தாழ்ந்த உடலை நோயற்ற உயர்ந்த உடலாக ஏன் மாற்றாது? என்று வினவுகின்றார்கள், சித்தர்கள்.
சித்த மருத்துவத்தின் உறுப்புகள்
மூன்று கண்கள்; நான்கு தலைகள்; ஐந்து முகங்கள்;
ஆறு கைகள்; எட்டு உடல்கள்; பத்துக் கால்கள் எனும்
முப்பத்தாறும் மருத்துவ உறுப்புகளாகும்.
மூன்று கண்கள் : மருந்து, மருந்தின் சுத்தி, மருந்தின் குணம் ஆகிய மூன்றும் மூன்று
கண்கள்.
நான்கு தலைகள் : வாதம், பித்தம், ஐயம், தொந்தம் ஆகிய நான்கும் நான்கு தலைகள்.
ஐந்து முகங்கள் : வாந்தி, பேதி, குடல் சுத்தி, நசியம், இரத்தத்தை வெளியாக்கல்
ஆகிய ஐந்தும் ஐந்து முகங்கள்.
ஆறு கைகள் : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய
ஆறும் ஆறு கைகள்.
எட்டு உடல்கள் : எண்வகைத் தேர்வு முறைகள் எட்டு உடல்கள்.
பத்து கால்கள் : நாடிகள் பத்து, வாயுக்கள் பத்து ஆனாலும் அவை பத்துப்
பெயர்களால் குறிக்கப்படுவதால் பத்து கால்கள் எனப்படும்.
என்று குணவாகடம் கூறுகிறது.
இந்த முப்பத்தாறு உறுப்புகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்களையே மருத்துவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
எண்வகைத் தேர்வு முறை
சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடி, பரிசம், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன. இவற்றில் ஒலித்தேர்வு, வண்ணத் தேர்வு, சுவைத் தேர்வு, நாற்றத் தேர்வு என்பவை பிற மருத்துவங்களில் காணப்படாதவை. எண்வகைத் தேர்வின் மூலமாக சுமார் 5000 நோய்களை அறிந்திருக்கிறார்கள் என்பது வியப்பானது. ஆனால், இதுவரை அறிவியலால் அறியமுடியாத அரிய அனுபவ முறையாக இருக்கிறது.
மருந்தியல்
சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன.
சித்த மருந்தியல் அணுவை அடிப்படையாகக் கொண்டது. மருந்துப் பொருள்களில் உள்ள அணுவை நுண்ணணுவாகவும்’ பரமாணுவாகவும் மாற்றுவது, சித்த ‘மருந்தியல்’ ஆகும்.
ஒரு பொருளிலுள்ள அணுக்களை வேறொரு பொருளிலுள்ள அணுக்களுடன் இணைத்து, வேதியல் முறைப்படி புதிய அணுக்களை உருவாக்கி, அதன் மூலம் நோய்களைக் களைவது சித்த மருந்தியலின் அடிப்படை யாகும்.
இவ்வாறு, அணுவியல் மாற்றங்களை உருவாக்க, வெப்பம், தீ, நெருப்பு போன்ற உலைகளின் மூலம் அணுக்கள் தயாரிக்கப் படுகின்றன. மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்ற உலைகள், ‘புடம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றது.
புடம்
மருந்துகள் தயாரிக்கும் போது, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர்.
உலகியல்
உலகமாகிய அண்டம், உடலாகிய பிண்டம், நோய்க்குரிய மருந்து, மருந்தைச் செய்வதற்கு வேண்டிய வாதமுறைகள் ஆகிய அனைத்தும் ஒத்த முறையில் இயங்குகின்றன என்றறிந்தவர்கள் தமிழ் மருத்துவ முன்னோர்கள். “மூன்றே பொருளால் ஆனது அண்டம்
மூன்றே பொருளால் ஆனது பிண்டம்
மூன்றே பொருளால் ஆனது மருந்து
மூன்றே பொருளால் ஆனது வாதமே”
என்பதால் ஞாயிறு, திங்கள், மழை ஆகிய மூன்று பொருளால் ஆனது அண்டம். வாதம், பித்தகம், ஐயம் என்னும் மூன்று பொருளால் ஆனது பிண்டம். இரசம், கெந்தகம், உப்பு ஆகிய மூன்று பொருள்களால் ஆனவை மருந்தும், வாதமும். இவ்வாறு உலகப் பொருள்களின் மூலத்தை மூன்று பொருள்களின் தன்மையை ஒப்பிட்டுக் காணும் முறை வேறெங்கிலும் காணவியலாது.
சாகாக்கால், வேகாத்தலை, போகாப்புனல்
சாகாத கால், வேகாத தலை, போகாத புனல் என்னும் மூன்றும் குறியீட்டுச் சொற்களாகும். இம்மூன்றும் வைத்தியம், வாதம், ஞானம் ஆகிய மூவிடங்களிலும் இடம் பெறும்.

சாகாக்கால் – இரசத்தை மணியாகக் கட்டுதல்
வேகாத்தலை – கெந்தகம் நெருப்பில் புகையாமல் கட்டுதல்
போகாப்புனல் – காந்தம் தண்ணீரில் மூழ்காமல் மிதத்தல்
எனக் கொள்ளப்படும். ஆனால் இவை மருத்துவத்துக்கு மட்டுமே பொருளாகும்.
சித்தர்நூல்களில் பெரும் புதிராக விளங்கும் இம்மூன்றும் மறைமொழிச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், இவை சூதம், கெந்தகம், காந்தம் என்னும் மருந்துப் பொருள்களையும் அடி நடு முடி என்னும் மூலாதாரம், சுழுமுனை, உச்சி ஆகிய யோக நிலைகளையும் அகரம் உகரம் மகரம் என்னும் மந்திரங்களையும் உரைப்பவை என அறியப்படும் இவையே சித்தர் தத்துவத்தின் வேர்களாகும். இவை அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நிலையெனவும் கூறுவர்.
உயிரியல்
உயிரின் வடிவம். அளவு எவ்வாறிருக்கும் என்பதைத் தமிழ் மருத்துவத்தின் முதல்வராகிய திருமூலர் குறிப்பிடுகிறார். அதாவது, பசுவினது மயிர் ஒன்றின் பருமனை நூறு பங்கு செய்து, அந்த நூறில் ஒரு பருமனை ஆயிரம் பங்கு செய்தால் அதில் ஒன்றினது பருமனே அணுவாகிய உயிரின் பருமன் என்கிறார். இந்த அளவு இன்றைய அறிவியலார் கண்டறிந்த அணுவின் பருனொடு ஒத்திருப்பதைக் காணலாம். (திருமந்திரம். செய்.1974)
உடலியல்
தமிழ் மருத்துவத்தின் வரலாறும் உடலியல் கோட்பாடும் சிந்து நதிக்கரையில் தொடங்குகிற எனலாம். சிந்துவெளி முத்திரை எழுத்துகளில் ‘எட்டு’ என்னும் எண்ணைக் குறிக்க மனித உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. அது,ஒரு குறியீடாகும். எட்டு எனும் எண்ணைக் குறிக்க ஏன் மனித உருவம் பொறிக்க வேண்டும்?
எட்டு என்ற எண்ணுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு?
ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப்படி தொண்ணூற்றாறு அங்குலம் உயரம். அதாவது, “எண் சாண் உடலம்” என்றும், “எறும்புக்கும் தன் கையால் எட்டு” என்றும் உடலின் உயரம் குறிக்கப் படுகிறது. இந்த அளவு எல்லார்க்கும் பொது என்கிறது, திருமந்திரம். (திருமந்திரம். பா. 273)
மனித உயரம் தொண்ணூற்றாறு அங்குலம், எண் சாண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உடல் தத்துவம் தொண்ணூற்றாறு என்றாயிற்று. சிந்துவெளி முத்திரையில் குறிக்கப்பட்டிருக்கும் ‘எட்டு’ தமிழ் மருத்துவத்துக்கே அடிப்படையாயிற்று. எவ்வாறென்றால், மருந்து காய்ச்சும் போது எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மட்டுமே அது நன்மருந்து. இதனையே, ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்றும் வழக்குவர். எட்டுக்கு ஒன்று என்பது மருந்துக்கு மட்டுமல்ல! நன்னீரைக் கூட எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சிக் குடித்தால், அதுவும் நோயைத் தீர்க்கும் மருந்தாக மாறும்! என்பது பிறப்புக்கும் மருந்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து கூறும் அறிவியல் விளக்கமாகும்.
மனித உடம்பு நான்கு வகையாகும். அவை, பருவுடல், நுண்ணுடல், போர்வையுடல், முதலுடல் என்பன. (திருமந். 2089) இவை நான்கும் உயிருக்கு உறையாக அமைகின்றன. அவ்வுறைகள் தொண்ணூற்றாறு தத்துவங்களில் அடங்கும். உயிரானது நரம்பு மண்டலத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. (திருமந். 2107) என்பதை அறிவியலுக்கு உடன்பாடானதே யாகும்.
நோய்த் தடுப்பு முறைகள்.
நோய் வருமுன் காப்பதும், நோய் வராமல் தடுப்பதும் வளர்ந்த மருத்துவத்தின் செயல்கள் எனலாம். அவ்வாறான செயல்கள் பல தமிழ் மருத்துவத்தில் காணப் படுகின்றன.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை கக்கல் மருந்தும், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கழிச்சல் மருந்தும் ஒரு மாத்த்திற்கு ஒரு முறை மூக்கில் நசியமும் மூன்று நாள்களுக்கு ஒரு முறை கண் மருந்தும் பயன்படுத்தினாம் நோய்கள் அண்டாது. (அகத்தியர் நயனவிதி – 500. பா.24)
பிணியணுகாவிதி
“திண்ண மிரண்டுள்ளே சிக்க லடக்காமற்
பெண்ணின்பா லொன்றைப் பெருக்காமல்- உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி.

“பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்;
பகற்புணரோம்; பகற்றுயிலோம்; பயோதரமு மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்: ஒன்றைவிடோம்: இடதுகையிற் படுப்போம்;
மூலஞ்சேர் கறிநுகரோம்: மூத்ததயிர் உண்போம்:
முதனாளிற் சமைத்தகறி யமுதெனினு மருந்தோம்:
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்:
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே”.

“உண்பதிரு பொழுதொழிய மூன்றுபொழு துண்ணோம்:
உறங்குவதி ராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்:
பெண்கடமைத் திங்களுக்கோர் காலன்றி மருவோம்:
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீ ரருந்தோம்:
மண்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்:
வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்:
நண்புபெற வுண்டபின்பு குறுநடையுங் கொள்வோம்:
நமனார்க்கிங் கேதுவை நாமிருக்கு மிடத்தே”.
- பதார்த்த குண சிந்தாமணி
வனவியல் (Forest Science)
தமிழ் மருத்துவர்கள் வனவியலில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு “கோரக்கர் மலைவாகடம்” என்னும் நூல் சான்றாகிறது. அந்நூலில் தமிழகத்தின் மலைகளையும் அவற்றில் கிடைக்கப்பெறும் மூலிகைகள் பற்றிய அனைத்துச் செய்திகளையும் விரித்துரைக்கக் காணலாம்.
தாவரவியல்
மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருப்பதைக் காணலாம்.
கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன்,அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம். (நந்தீசர் சகல கலைஞானம். பா. 936)
மேலும், மருத்துவத்தில் பயன் படக்கூடிய மரம், செடி, கொடி, வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், கனி, கொட்டை போன்ற தாவர உறுப்புகளின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் கூறும் நூலாக, “பதார்த்த குண சிந்தாமணி” விளங்குகிறது.
மரணம்
மனிதன் என்று தோன்றுகின்றானோ அன்றே அவனின் இறப்பும் எழுதப்படுகிறது என்பர். மனித உயிர் உருவாகும் போதே, உயிரின் கருவில், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய ஆறு பருவங்களும் அமைகின்றன.
“பேறு யிளமை யின்பம் பிணி மூப்பு சாக்காடுஆறுங் கருவில மைப்பு”
என்று குறிப்பிடப்படுகிறது.

பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும். உறங்குவது போலும் உறங்கி விழிப்பது போலும் எனக் கண நேரத்தில் அவ்விரண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்றும் கருதப்பட்டது.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு”
என்னும் குறள் கூறும் கருத்து சித்தர்களுக்கு உடன்பாடானதன்று.
மரணத்தை வெல்லுதல்
மரணம் என்பது இயற்கை. அதை மாற்றிக் காண்பதே சித்தர்களின் கற்ப சாதனை என்பது போல், கற்பம் என்னும் மருத்துவ முறைகளினால், காற்றைப் பிடிக்கும் முறைகளினால் மரணத்தை வெல்ல முடியும் என்று சித்தர்கள் கூறக் காணலாம்.
பீனியல் சுரப்பு (Pineal Gland)
பீனியல் சுரப்பி என்பது மனித மூளையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயக்கத்தை யோகத்தின் மூலமாகச் செயல்பட வைப்பதே சித்த முறையாகும். பீனியல் சுரப்பு 14 வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர் அதன் வளர்ச்சிக் குன்றிவிடும். பீனியல் சுரப்பி மூலம் சுரக்கும் ஹார்மோன், ‘மெலடோனின்’ எனப்படும். மெலடோனின் எனப்படும் ஹார்மோன் மனித ஆயுளை நீட்டிக்கவும் பாதுகாக்கவும் வல்லது என்பர். இதன் சுரப்பை நீட்டிக்க வாசியோகம், குண்டலி யோகம் பயன்படுகிறது. இச் சுரப்பு குறைந்தால் ஆயுளும் குறையும். மெலடோனின் சுரப்பை அதிகரிக்க யோகம், கற்பம் போன்றவை பயன்படுகின்றன.
மறைபொருள்
மறைபொருள்களில் மருந்துகளைக் குறிப்பிடப்படும் பல பாடல்கள் காணப்படுகின்றன. இதன் உட்பொருளை அறியாமல் வெளிப்படையான பொருளை அறிந்துகொண்டு தவறுகள் நிகழ்வதுண்டு. உண்மையான பொருளை அறியும் பயிற்சியும் மருத்துவ அனுபவமும் இல்லாமல் பிழைகள் நேர்வதுண்டு.
“தாசிவீடு சென்ற தறுதலைக்குச்
செம்மையாய்த் தருக செருப்படிதான்
காசும் அற்றுவிடும்; கவம் இளகும்
கதியே சைவம் என்றாடு பாம்பே”
இப்பாடல், தாசிவீடு சென்று வந்ததால் வந்த மேகவெட்டை எனும் பாலியல் நோய்க்குச் செருப்படி என்னும் மூலிகையைக் கொடுத்தால் குணமாகும் என்றும் காச நோய்க்கும் கபத்திற்கும் தாளிபத்தியம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சித்தர் சைவ நெறியையும் மருத்துவத்தையும் இணைத்துக் கூறியுள்ளார்.
கும்ப முறை
தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் பலர் மருத்துவர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், மெய்ஞ்ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இக்காலத்தில் அறிவியல் வெற்றியாகக் கருதப்பெறும் மரபணு முறையைப் போல, சித்தர்களும் தங்கள் அறிவியல் வெற்றியாகக் கும்ப முறையைக் கூறுவர். கருப்பையிலிருந்து குழந்தை பிறப்பது யோனிமுறை என்பதைப் போல, கும்பம் என்னும் கலசங்கள் மூலம் குழந்தையை உருவாக்குவதைக் கும்பமுறை என்பர். கும்ப முறை மூலம் குழந்தையை உருவாக்கும் முறையே சித்தர்களின் அறிவியல் வெற்றியாகக் கூறப் படுகிறது.
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது. மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று. உதாரணமாக,
Ø பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
Ø கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும்.
Ø மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது.
Ø இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது.
Ø கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது.
Ø உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூலிகைகளைப் பயன் படுத்திய சித்த மருத்துவர்கள், அந்த மூலிகைப் பொருள்களுக்குச் சூட்டியுள்ள காரணப்பெயரே சான்றாகும்.

இந்திய மருத்துவச் சட்டம்
இந்திய அரசு இயற்றிய ‘மருந்துகள் மற்றும் அழகு சாதன்கள்’ சட்டம் 1940’ 1945’ 1995 schedule ‘J’ என்னும் பிரிவு. 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது. அந்நோய்க்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற ஆங்கில மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியாதவை என்று மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட 51 நோய்களைக் குணப்படுத்தவோ தடுக்கவோ கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கின்றன என்று கூறுவது தவறானது; ஆபத்தானது; நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று, உலக சுகார நிறுவனத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது.
ஆனால், நடப்பது என்ன? மருந்தில்லா நோய்களுக்கு மருத்துவ மனைகளும் சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றார்களே. இச்செய்தியை இந்திய மருத்துவச் சங்கமும், தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பொதுமக்களுக்கு விளக்குவதில்லை.
மருந்தில்லை என்று கூறப்படுகின்ற இந்த 51 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் சித்த மருத்துவம் போலியானது. நம்பத் தகுந்த மருத்துவம் இல்லையென்னும் கருத்தை பரப்புகின்றார்கள்.
சிறந்த மருத்துவத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் எண்ணம் மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் இருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைச் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். சித்த மருத்துவ உத்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மைகளை உலகுக்கு அறிவிக்க முன் வர வேண்டும்.
ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப் போல, வானியல் என்னும் மூலத்திலிருந்து தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழறிஞர்கள். சங்க காலத்திலும் சங்கம் மறுவிய காலத்திலும் வானியலிலும் மருத்துவத்திலும் சிறந்திருந்து விளங்கிய மெய்ஞ்ஞான அறிஞர்களான ஆசீவக மரபினரால் உருவாக்கப் பட்டது, தமிழ் மருத்துவம். அது, தமிழகத்தின் தென்பகுதியில் சிந்தாமணி மருத்துவமாகவும், வட பகுதியில் சித்த மருத்துவமாகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது.
அழுத்தினால், அரசியல், நாகரீக மாற்றத்தினால், தமிழ் மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் முறைகளெல்லாம் தவறானவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.
தமிழைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மருத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்யவேண்டும். கலையில்லாத இனம் தலையில்லாத மனிதனாகக் கருத்தப்படுவான். தமிழ்க்கலையான சித்த மருத்துவக் கலையைப் பாதுகாக்க தமிழர்கள் முன்வரவேண்டும்.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் மருத்துவம்!
(குறிப்பு:20.௩.௨00௯ முதல் ௨௨.௩.௨00௯ வரை, கொடைகானலில் நடைபெற்ற 'செம்மொழி உயராய்வுக் கருத்தரங்கில்' படிக்கப் பெற்ற கட்டுரை)

'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்'

சித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள் என்றும் பொருள் உண்டு. அவர்கள் அறிவியலை ஞானமாக்கியவர்கள். அவர்கள் மனித வாழ்க்கைக்குச் சித்தமானதைக் கண்டு சொன்னார்கள். உணவை உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளை ஏற்படுத்தினார்கள். சுகவாழ்வுக்காக அறிவியல்ரீதியான சில வழக்கங் களை ஏற்படுத்தினார்கள்.

அவ்வாறு வந்தது தான் மனிதனின் தலைமுடி அளவு குறைவாய் இருத்தல் என்பது ஆரோக்கியமானது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. மேலைநாடுகளில் பெரும்பாலான ஆண்கள் தலையில் அதிக முடியையும் பெரிய மீசையையும் வைப்பதே இல்லை.
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் எனக் கண்டவர்கள் பழந்தமிழர்கள். தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலுமே அதற்கு ஈடாகாது. இன்றைக்கு மேல்நாடுகளில் தாய்ப்பால் குந்தைகளுக்குக் கொடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றார்கள். ஆடும், மாடும், நாயும் தாய்ப் பாலைத் தம் குட்டிகளுக்குக் கொடுக்கிறபோது மனிதர் மட்டும் ஏன் மாற்றுப்பால், மாட்டுப்பால் தேடுகின்றனர்.

குழந்தை பிறந்ததும் இயற்கையாகவே தாயின் மார்பில் பால் சுரக்கும். அது குழந்தை குடிக்கத்தான். அதனைக் கொடுக்காமல் விடுவது நாகரீகம் என்றும் மேனி அழகுக்கு நல்லது என்றும் நினைக்கின்றனர் சிலர். ஆனால் இவ்வாறு பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்காமல் விடுவதால் மார்பகப் புற்றுநோயே வருகிறதாம்.
கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கைக்கு எதிராக ஊசி போட்டுக் கொள்கிறார்கள். மாத்திரை சாப்பிடுகிறார்கள். இவற்றால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த உடலே கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கையான முறையில் சில வழிகளைச் சொல்லியிருக்கிறது.

வாரத்தில் ஒருநாள் மாதத்தில் பலநாள் பட்டினி(சில நோயாளிகள் தவிர்ந்த)யாய் இருப்பது உடலுக்கு நல்லது என்பது பழந்தமிழன் மருத்துவம். பட்டினி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடிகிறது. நோய் எதிர்ப்பாற்றலை மிகுதிப்படுத்தலாம். நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். உடலில் உள்ள மோசமான கிருமிகளை அழிக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை.

இவற்றை நனைவில் கொண்டுதான் தவஞானிகள் உண்ணாவிரதத்தையும் பேசா விரதத்தையும் ஒருநாள் (வாரம் ஒரு முறை) பின்பற்றினர். அதிகாலைத் துயில் எழுதல் உடல் நலத்திற்கு நல்லது. நீண்ட வயது வாழ்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அதிகாலை எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். அதிகாலையில் காற்று தூய்மையாக இருக்கும். சுத்தமான பிராணவாயு தெருக்களில் அப்போது கிடைக்கும்.

குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்கும். இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல். எனவேதான் இதனை சுவாசிக்கும் பொருட்டு ஆண்கள் மார்கழி பஜனைக்குப் போக வைக்கப்பட்டார்கள். பெண்களை வீட்டு வாசலில் கோலம் போட வைத்தார்கள். கோலம் போடுவது பண்பாட்டு மரபு. அதே நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயினங்களுக்கு உணவுக் கொடை இடுவதே முக்கியமானது.

ஆனால் இன்று தானிய மாவைத் தவிர்த்து வெள்ளைக்கல்லை அரைத்து மாவாக்கிக் கோலம் போடுகிறார் கள். இதனால் எறும்புகள் ஏமாந்தது நமக்குத் தெரியுமா என்ன?

அதே நேரத்தில் இந்த வெள்ளைக் கல் மாவு காற்றிலே கலந்து மனிதர்களின் மூச்சிலே இணைந்து நலத்திற்கு கேட்டை விளைவிக்கும். எத்தனை பேர் இதனை உணர்ந்தோம்?. நம்மை அறியாமலே நம் தெருக்களில் வளரும் வேப்பிலை மரம் செய்யும் நன்மை தெரியுமா? அது காற்றைத் தூய்மைப் படுத்துகிறது. நிழல் தருகிறது. தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது. அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலைப் படுக்கை சுகமானது. வயிற்றுப் புண், குஷ்டம், சர்க்கரை நோய்களுக்கு அதன் இலைகள் அருமருந்து.

எனவே தான் தமிழர்களோடு வேப்பமரம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.வில்வ இலையில் மருத்துவம் இருக்கிறது. உடலில் உள்ள ஐம்பூதங்களைச் சமநிலைப்படுத்துவது அதன் தீர்த்தம். எனவேதான் சில கோயில்களில் வில்வ இலைத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. வாழைப்பழம் புத்திசாலிகள் சாப்பிடும் பழம். ஏழைகளின் ஆப்பிள். உண்பவருக்குப் பல நன்மைகள் இப் பழத்தால் கிடைக்கின்றன. இது பழந்தமிழன் பண்பாட்டுப் பழமாகவும் இருக்கிறது.

அதே போன்ற அந்தப் பழம் தரும் வாழைமரம் தமிழர்களின் பண்பாட்டு மரமாகயிருக்கிறது.அதன் இலையில் உண்பது சுவைக்கு மட்டுமல்ல நலத்திற்கும் உதவுகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கும் நண்பனாக இருக்கிறது. தொடர்ந்து வாழை இலையில் உண்பவர்களின் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதன் தண்டுகள் சிறுநீர்க்கல் அடைப்புகளை நீக்கும். எனவே தான் மருந்தாகப் பயன்படுகிற மரங்களைப் பழந்தமிழர் வீட்டுத் தோட்டத்துக்குள் கொண்டு வந்தனர். தமிழன் வீட்டுத் தோட்டத்து மரங்கள், செடிகள், கொடிகள் உணவிற்கும் மருந்திற்கும் பயன்படுகின்றன.

ஆனால் இன்றைய மேல்நாட்டு நிாககத்தில் வெறும் அழகுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட மரம், செடி, கொடிகளே வீட்டுத் தோட்டத்தில் இருக் கின்றன. வீட்டுத் தோட்டத்தில் கறிவேப்பிலை இருந்தால் சாம்பாருக்கு உதவும். துளசிச் செடியின் இலைகள் வாயில் போட்டு மெல்ல உதவும். இஞ்சிச் செடியில் கிடைக்கும் இஞ்சி செரிமானத்திற்கு உதவும். மஞ்சள் செடியின் மஞ்சள் பூசிக் குளிக்க உதவும். மஞ்சள் சிறந்த ஒரு கிருமி நாசினி. ஆகவேதான் மஞ்சள் தூளைத் தண்ணீல் கரைத்து வீட்டு வாசலில் தெளிப்பார்கள். கிராமத்து திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டுதல் ஒரு அர்த்தத்தோடு வந்ததுதான். வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் முருங்கைக்கீரை ஆண்மையைப் பெருக்கும். கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். அந்த மருந்து ஆங்கில மருந்தைவிட பலனை அள்ளித் தரவல்லது. அதன் சக்தி உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானிகள் கீழாநெல்லியை மாத்திரையில் கொண்டு வந்துள்ளனர். இது தமிழர் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

தமிழர் மருத்துவமாகிய சித்த மருத்துவம் 2,50,000 மூலிகை களைக் கொண்டு மருத்துவம் பேசுகிறது. இவற்றை நாம், ஆங்கில மருந்து என்பனவற்றை மட்டும் நம்பிக்கொண்டு புரிந்து கொள்ளாதது பெரிய தவறு. சித்த மருத்துவம் பக்க விளைவு அல்லது பின் விளைவு இல்லாத மருத்துவம். இந்த நாட்டின் இயற்கைச் சூழலுக்கேற்ப தட்ப- வெப்பநிலைகளுக்கேற்ப, கால மாற்றங்களுக்கேற்ப இயற்கையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளே அவைகள்.

அதே நேரத்தில் இயற்கை விதிகளுக்குட்பட்டு இயற்கை நெறியோடு உணவினை உண்ணுவதே உடலுக்கு நலம் சேர்க்கும் என்கிறது சித்த மருத்துவம். எனவே தமிழ்ச் சித்தர்களின் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தச் சித்தமானால் அது நம்மை நிச்சயம் வாழ வைக்கும்.

நன்றி- தென்செய்தி
(பழந்தமிழர் உணவு, உடை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு முதலான பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விளக்கும் நூல் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அந்த நூலிலிருந்து..).